டெல்லி: ஆட்சி மாறிவிட்டதால் நீதித்துறை செயல்பாடுகள் மாறிவிடாது என தமிழகஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் மீது பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்டது. அவர்மீது  வருமானத்தைமீறி சொத்து சேர்த்தாக அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதாவது,  கடந்த 2002-2006ஆம் ஆண்டில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிந்து அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கியது.

அனிதா ராதாகிருஷ்ணன் அவர் தற்போது திமுக ஆட்சியிலும் அமைச்சராக இருந்து வருகிறார். இதையடுத்து தன் மீதான சொத்துகுவிப்பு வழக்கை ரத்து செய்ய நீதி மன்றத்தில் கோரிய நிலையில்,  அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது.  இதையடுத்து, அவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த  மாதம் நடைபெற்ற விசாரணையின்போது,  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான பணமோசடி வழக்கின் அமலாக்கத்துறை விசாரணைக்கு ச்சநீதிமன்றம் 2மாதம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்,  “லஞ்ச ஒழிப்புத்துறை பதிந்த சொத்துகுவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோருவது என்பது ஒரு மாநிலத்தில் ஆட்சி மாறியவுடன் தொடங்கும் ஒரு வழக்கமான நடைமுறையாக உள்ளது. ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அந்த கட்சியினர் தங்கள் மீதுள்ள வழக்குகளை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்கின்றனர். இது விசித்திரமான நடைமுறையாக உள்ளது.

ஆனால், இந்த நீதிமன்றம் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறது. ஆட்சி மாறிவிட்டால் அனைத்து நடைமுறையும் மாற வேண்டும் என்று இல்லை. ஆட்சிக்கும் இதுபோன்ற வழக்கு விசாரணைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். ஆட்சி மாறிவிட்ட காரணத்தால், வழக்கு விசாரணையையும் , நீதிமன்ற விசாரணையையும் மாற்ற முடியுமா? என கேள்வி எழுப்பினர்.

அரசு அலுவலகத்தை உங்கள் சொந்த நலனுக்காக பயன்படுத்த முடியாது. உங்கள் கட்சி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீங்கள் தயங்கலாம். ஆனால், ஆட்சி மாறிவிட்டதால், அரசு இயந்திரத்தின் இயக்கம் மாறிவிடாது. ஆட்சிக்கும் அரசு இயந்திரத்தின் இயக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என கூறியதுடன், இந்த விவகாரத்தில் வேறு எதுவும் கூறுவதற்கு இல்லை என காட்டமாக தெரிவித்தனர்.

இதையடுத்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் மனுவை திரும்பப் பெற அனுமதி கோரப்பட்டது. மனுவை திரும்பப் பெற அனுமதியளித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் 6.5 கோடி சொத்துகள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை…