டில்லி:

சென்னை அருகே சிறுசேரி ஐடி பெண் ஊழியர் உமாமகேஸ்வரி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுள்தண்டனையை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

சென்னையை அடுத்த சிறுசேரியில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஐ டி ஊழியர் உமா மகேஸ்வரி என்ற இளம்பெண் அங்குள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம் தேதி பணிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த  நிலையில், அதே ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி சிப்காட் வளாகத்தில் உள்ள முட்புதரில் கழுத்து அறுக்கப்பட்டு, அழுகிய நிலையில் உமா மகேஸ்வரியின் சடலம் கண்டு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில்,  உமா மகேஸ்வரி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொண்டர்பாக  மேற்கு வங்கத்தை சேர்ந்த உத்தம் மண்டல், ராம் மண்டல், உஜ்ஜல் மண்டல் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. அவர்களுக்கு மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து அவர்கள் 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தனர். அதை உயர்நீதி மன்றமும் நிராகரித்துவிட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.