சென்னை: 100 நாள் வேலைத் திட்டத்தில் நிதி முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்புமாறு, தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மத்தியஅரசு திட்டமான மகாத்மாகாந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின்கீழ் ஏழைகளுக்கு 100நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் உள்ளன. சரியான முறையில் பணி நடைபெறுவது இல்லை என்றும், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் முறைகேடு நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இந்த நிலையில்,‘ தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தருகாபுரம் கிராம ஊராட்சியில் கண்மாய் நிலமான இருகரையான் பகுதியில் 100 நாள் வேலை திட்டம் நடப்பதாக கூறி, உரிய அனுமதி பெறாமல் தனியார் விவசாய நிலத்தில் வேலை பார்க்க வைத்த , ஊராட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், நாடு முழுவதும் 12கோடி பேரும் ,தமிழகத்தில் 12.63 லட்சம் பேரும் நூறு நாள் வேலை திட்ட பணியில் பணிபுரிந்து வருகின்றனர். பணியாளர்களின் வருகைப்பதிவேடு NNMS செயலியில் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

திட்டப்பணிகள் தொடங்குவதும், முடிந்தும் அந்த செயலில் பதிவு செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் 100நாள் திட்டப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. நூறுநாள் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்கப்படுகிறது. 100நாள் வேலை திட்டப்பணி களுக்கான செலவை விட. GPS கருவியில் கண் காணித்தால் அதிக செலவீனம் ஆகும் என்பதால் நூறு நாள் வேலை திட்டப்பணிகளை GPS கருவி மூலம் கண்காணிக்க வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து நீதிபதிகள், கிராமங்களில் நடைபெறும் , 100 நாள் வேலை திட்ட பணியில் நிதி முறைகேடுகளை தடுக்கவும் முறைகேட்டில் ஈடுபடும் உள்ளாட்சி அமைப்பினர், அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கவும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.