மதுரை: கோவில் யானைகளை மறுவாழ்வு முகாம் அனுப்புவது குறித்து வனத்துறை ஆலோசிக்க வேண்டும் என்றும் கோவில்கள் மற்றும் தனியார் யானைகள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை  நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  மேலும் இனிமேல் கோவில்களுக்கு யானை வாங்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த சேக்முகமதுவுக்குச் சொந்தமானது 56 வயதான லலிதா என்ற பெண் யானை உள்ளது. இந்த யானை பராமரிப்பு குறித்து வனத்துறையினர் மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி யானையை பாகனிடமிருந்து பிரித்து அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும், யானை தொடர்ந்து பாகனின் பராமரிப்பிலேயே இருக்கட்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

சில வாரங்களுக்கு முன் கோவில் விழா ஒன்றுக்கு லலிதா யானை அழைத்துச் செல்லப்பட்டபோது காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக விலங்கு நல ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன், “லலிதா யானைக்கு உரிமை கோரிய வழக்கில் யானையை அவரிடம் இருந்து பிரிக்க வேண்டாம் என்றும், யானையை முறையாக பராமரித்து அது தொடர்பான அறிக்கையை குறிப்பிட்ட கால இடைவெளியில் அனுப்புமாறும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து, கடந்த விசாரணையின்போது,  யானை பராமரிப்பு குறித்து அறிக்கை அளிக்கப்பட்ட நிலையில், அதில் யானைக்கு காயம் ஏற்பட்டது தொடர்பாக எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதி,  கால்நடை  மருத்துவர் கலைவாணனை, லலிதா யானை பராமரிப்பிற்கான சிறப்பு பணிக்காக ஒதுக்க வேண்டும் என்றும் லலிதா யானைக்கு 60வயது ஆகிவிட்டதால், இனிவரும் காலங்களில் உணவும், பராமரிப்பு வழங்கி ஓய்வு எடுக்க செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்தநிலையில், யானை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் அனைத்து கோவில்கள் மற்றும் தனியாரிடம் வளர்க்கப்படும் யானைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இனிவரும் நாட்களில் எவ்விதமான யானையும் வளர்ப்பு யானையாக மாற்றப்படக்கூடாது என்ற ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ள உயர்நீதிமன்றத்தின் உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மீண்டும் உத்தரவிட்ட நீதிபதி,

கோவில்களில் வளர்க்கப்படும் யானைகள் அரசு மறுவாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய இதுவே சரியான நேரம். எனவே அது தொடர்பாக ஆலோசித்து அதன் அடிப்படையில் அனைத்து கோவில்களுக்கும் உத்தரவுகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.

இனிமேல் கோவில்களுக்கு  யானைகள் வாங்கக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதி, இதுதொடர்பாக அறநிலையத்துறைஆணையர், அனைத்து கோவில் நிர்வாக அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், எல்சா பவுண்டேஷன் சார்பில் அறிக்கப்பட்ட அறிக்கையில்,  திருப்பத்தூர் மாவட்டம், சேலம் மாவட்டம் ஆகியவை யானைகள் மறுவாழ்வு முகாம் அமைப்பதற்கு தகுந்த இடங்களாக உள்ளன என குறிப்பிட்டு இருக்கிறார்.  திருச்சி எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு முகாம் அமைக்க உகந்த இடம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  எனவே இதுதொடர்பாகவும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்திருக்கிறார்.