குடியாத்தம்

தனது தாயிடம் குடிபோதையில் தக்ராறு செய்த தந்தையைக் குறித்து 13 வயது மகன் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளான்.

 வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கள்ளூர் முல்லைநகர் பகுதியைச் சேர்ந்த ஜாபர் கூலித்தொழிலாளி ஆவார். இவருடைய மனைவி பரானா. இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர். தினமும் ஜாபர் குடித்துவிட்டு வீட்டில் மனைவியிடம் தகராறு செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஜாபர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடித்துவிட்டு வந்து மனைவி பரானாவிடம் போதையில் தகராறு செய்து உள்ளார்.  இதைத் தடுத்த மகன்களையும் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த பராணா விஷத்தை குடித்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரது 13 வயது மகன் தனது தந்தை ஜாபர் தினமும் குடித்துவிட்டு வந்து தாயாரிடம் தகராற்றில் ஈடுபட்டு அடித்துக் கொடுமைப்படுத்துவதாகவும் மகன்களையும் அடித்துக் கொடுமை செய்வதாகவும் கூறி குடியாத்தம் டவுன் காவல்துறை ஆய்வாளர் பார்த்தசாரதியிடம் நேற்று முன்தினம் கண்ணீர் மல்கப் புகார் தெரிவித்தான்.

காவல்துறை ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் காவலர்கள் சிறுவனின் தந்தை ஜாபரை அழைத்து அறிவுரைகள் கூறி, குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தகராற்றில் ஈடுபடக்கூடாது எனவும், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும் என கூறி அறிவுரை வழங்கினர்.

அந்த சிறுவனிடம் நன்றாகப் படிக்க வேண்டும்  எனவும் இந்த வயதில் வேலைக்குச் செல்லக் கூடாது எனவும் அறிவுரைகளை வழங்கி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.