சென்னை:  திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 30 க்கும் மேற்பட்ட இடங்கள் உள்பட  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 70 இடங்களில்  இன்று  2 வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதே வேளையில், குரோம்பேட்டையில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவமனைக்கு அருகே உள்ள, அரசுக்கு சொந்தமான 200 கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலம் வருவாய்த்துறை அதிகாரிகளால்  மீட்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் உள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்கள் உள்பட சுமார் 70 இடங்களில் வருமான வரித்துறையினர், வருமான வரி முறைகேடு தொடர்பாக நேற்று (அக்டோபர் 5ந்தேதி) முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.  சோதனை நடைபெறும் இடங்களில்,   உள்ளே இருக்கும் நபர்கள் வெளியே செல்லவும், புதிய நபர்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனை இன்று 2வது நாளாக தொடர்கிறது.  அடையாறில் உள்ள திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் விடு மற்றும் அலுவலகம் மற்றும் குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனை, மருத்துவக்கல்லுரி   மற்றும் தியாகராய நகரில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஓட்டலிலும், வேளச்சேரியில் அவருக்கு சொந்தமாக உள்ள மருத்துவமனையிலும் சோதனை நடைபெற்று வருகிறது.  மேலும் ஆவடி பட்டாபிராமில் உள்ள அவருக்கு சொந்தமான வீடு பூட்டப்பட்டு இருந்த நிலையில், அதனை உடைத்துக்கொண்டு அதிகாரிகள் உள்ளே சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி,  பாரத் பல்கலைக் கழகம், மற்றும் அவரது கல்வி நிறுவனங்கள்,   மதுபான ஆலை, மாமல்லபுரத்தில் உள்ள கால்டன் சமுத்ரா  ரிசாட்ட் உள்பட  அவருக்கு சொந்தமான 30 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

அத்துடன்,  ,பூந்தமல்லி அருகே அமைந்துள்ள ஜெகத்ரட்சகனின் நெருங்கிய நண்பருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனை, . இதேபோன்று ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மற்றும் அவருக்கு நெருக்கான நபர்களின் இடங்களில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.மேலும் ஸ்ரீபெரும்புதூர், தண்டலம், வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் சாலையில் அருகே உள்ள மருத்துவ கல்லூரி, மற்றும் பாலாஜி பாலிடெக்னிக், உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருமான வரித்துறையினரின் சோதனைக்கு மத்தியில், குரோம்பேட்டையில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவமனைக்கு அருகே உள்ள, அரசுக்கு சொந்தமான 200 கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம் முன்னிலையில் வருவாய் துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். குத்தகை காலம் முடிந்த பிறகும் அந்த நிலத்தை தனிநபர் பயன்படுத்தி வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த அரசு நிலத்தில் இருந்த குடியிருப்புகளில் தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.  வருமான வரித்துறை சோதனை நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே, வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதுபோல, புதுச்சேரியில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவக்கல்லூரி உள்படபல இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டுவருகிறது.  புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் அகரம் பகுதியில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி உள்ளது.  இங்கு,  வருமான வரித்துறையைச் சேர்ந்த 12 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கல்லூரி நிர்வாகக் கட்டிடம் மற்றும் மருத்துவமனை நிர்வாகக் கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக உள்ளே பணியில் இருந்த ஊழியர்கள் யாரையும் வெளியில் அனுப்பவில்லை.

மேலும்,  ஜெகத்ரட்சகன் எம்.பியின் சொந்த ஊர் புதுச்சேரி அருகே உள்ள விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர் கலிங்கமலையில் உள்ளது. இவருக்கு புதுச்சேரியில் நட்சத்திர விடுதிகள் மற்றும் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளது. இருப்பினும் மருத்துவக் கல்லூரியில் மட்டுமே வருமான வரிச்சோதனை நடைபெறுகிறது. இந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.