சென்னை: தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 15ந்தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆதார் எண் இணைக்காதவர்கள் பிப்ரவரி 15ந்தேதிக்கு பிறகு மின் கட்டணம் கட்ட இயலாது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.   தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் தொடங்கப்பட்ட இந்த மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு பணியில்,  ஜனவரி 30 மாலை வரை 2.39 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள மொத்தம் 2 கோடியே 67 லட்சம் மின் இணைப்பு எண்கள் பயன்பாட்டில் உள்ளன. வீடுகளுக்கான மின் இணைப்புகள் மட்டும் 2 கோடியே 33 லட்சம் மின் இணைப்புகள் இருக்கிறது. இது தவிர 10 லட்சம் குடிசை மின் இணைப்புகள், 23 லட்சம் விவசாய மின் இணைப்புகள் 1 லட்சத்து 60 ஆயிரம் விசைத்தறி மின் இணைப்புகள் உள்ளது. 100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த 2022ம் ஆண்டு  அக்டோபர் 6-ந்தேதியே மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 2,811 மின்சார வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டு பொதுமக்களுக்கு ஆதார் எண்களை இணைத்து கொடுத்து வருகின்றனர்.  முதல்கட்டமாக டிசம்பர் 31-ந்தேதி வரை ஆதாரை இணைக்க ஏற்கனவே காலக்கெடு விதித்திருந்த நிலையில் 65 சதவீதம் பேர் தான் அந்த சமயத்தில் ஆதாரை இணைத்திருந்தனர்.

இதையடுத்து 2வது கட்டமாக ஜனவரி 31ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி ஜனவரி 31ந்தேதி வரை ம் 2 கோடியே 47 லட்சம் மின் இணைப்புகள் மட்டுமே ஆதாருடன் இணைக்கப்பட்டு இருந்ததது. இதையடுத்து இறுதிக்கட்டமாக பிப்ரவரி 15ந்தேதி அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. தற்போதைய நிலையில்,  2 கோடியே 64 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது. வருகிற 15-ந்தேதி வரை காலக்கெடு உள்ளதால் அதற்குள் ஆதார் எண்ணை இணைக்குமாறு விடுபட்டவர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டு வருகிறது.

இதுபற்றி அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், 3 கட்டமாக கால நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளதால் ஒரு சிலரை தவிர பெரும்பாலானோர் ஆதார் எண்ணை இணைத்து விட்டனர். இன்னும் 15-ந்தேதி வரை அவகாசம் உள்ளதால் அனைவரும் இணைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே இனிமேல் கால அவகாசம் வழங்கப்படாது என்று தெரிவித்தார்.

ஆதாரை இணைக்காவிட்டால் 15-ந்தேதிக்கு பிறகு மின் கட்டணம் செலுத்த இயலாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆதாரை இணைக்காதவர்களின் வீடுகளை கண்டறிந்து மின்வாரிய ஊழியர்கள் நேரில் சென்றும் நினைவுப்படுத்தி ஆதார் எண்ணை இணைக்குமாறு அறிவுறுத்தும் பணிகளும் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தன