சென்னை: மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், அவரது ஆசையை நிறைவேற்றுவேன் என்றும், தீவிர சிவ பக்தரான மயில்சாமியை சிவராத்திரி அன்று சிவன் தன்னுடன் அழைத்து கொண்டுள்ளார் என்றும் கூறினார்.
சிவராத்திரி அன்று கோவிலுக்கு சென்றுவிட்டு வந்த காமெடி நடிகர் மயில்சாமி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழக மக்களுக்கு பெரும் துயரத்தை கொடுத்துள்ளது. மறைந்த மயில்சாமியின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்று இறுதி காரியம் நடைபெறுகிறது.
மயில்சாமியின்  உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, மயில்சாமி என்னுடைய நெடுங்கால நண்பர். அவரை 23, 24 வயது இருக்கும்போதே எனக்கு தெரியும். மிமிக்கிரி ஆர்டிஸ்டா இருந்து அதற்கு பிறகு சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்தார். அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே எனக்கு தெரியும்.  அவர் தீவிர எம்.ஜி.ஆரின் ரசிகர், அதைவிட மிக தீவிர சிவனின் பக்தர்.
அடிக்கடி நாங்கள் சந்திப்போம், அப்போது நான் சினிமா துறையை பற்றி அவரிடம் கேட்பேன், அவர் சினிமாவை பற்றி பேசவே மாட்டார். இரண்டு விஷயங்களை பற்றிதான் பேசுவார். ஒன்று எம்.ஜி.ஆர். மற்றொன்று சிவன். நாங்கள் இந்த அளவிற்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தும் கூட அதிக படங்கள் நடிக்கவில்லை.
ஒவ்வொரு தடவையும் திருவண்ணாமலையில் நடக்கக்கூடிய கார்த்திகை தீபத்திற்கு அங்கே சென்றுவிடுவார். அங்கு இருக்கும் கூட்டத்தை பார்த்துவிட்டு அவர் ஹீரோவாக நடித்து விட்டு வெற்றிகரமாக படம் ஓடுவது போன்று அவர் சந்தோஷப்படுவார். அங்கிருந்து ஒவ்வொரு தடவையும் எனக்கு தொலைபேசி யில் தொடர்பு கொள்வார். கடைசி முறை கார்த்திகை தீபத்திற்கு என்னை தொடர்புகொண்டார், நான் படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் எடுக்க முடிய வில்லை. மூன்றுமுறை தொடர்பு கொண்டிருக்கிறார் என்னால் எடுக்கவே முடியவில்லை. அடுத்தமுறை என்னை மன்னித்துவிடுங்கள் என்னால் பேச முடியவில்லை என்று சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அப்படியே மறந்துவிட்டேன், இப்போ அவரே மறைந்துவிட்டார்.
சினிமா துறையில் இரண்டு நகைச்சுவை நடிகர்கள் இழப்பு பேரிழப்பு. ஒன்று விவேக், மற்றொன்று மயில்சாமி. இவர்களுடைய இழப்பு சினிமாதுறைக்கு மட்டுமில்லை, அவர்களுடைய நண்பர்களுக்கு மட்டுமில்லை சமூகத்திற்கே பேரிழப்பு. இரண்டுபேரும் நல்ல சிந்தனைவாதிகள்.
மயில்சாமியின் இழப்பு தற்செயலாக நடந்தது கிடையாது, சிவனின் கணக்கு. தன்னுடைய தீவிர பக்தனை அவருக்கு உகந்த நாளில் கூட்டி சென்றுவிட்டார்.  அவருடைய குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. அவர்களுடைய வாரிசுகளுக்கு சினிமா துறையில் நல்ல ஒரு எதிர் காலம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்
மயில்சாமியின் கடைசி ஆசை பற்றி கேள்விப்பட்டேன், வண்டலூர் அருகே உள்ள சிவன்கோவிலில் நான் பாலாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற அவரது ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவேன். இதுதொடர்பாக டிரம்ஸ் சிவமணியிடம் பேச இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.