திருவாரூர்:

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றைய போராட் டத்தில் பழ.நெடுமாறன் மற்றும் பி.ஆர்.பாண்டியன் கலந்துகொண்டார்.

அப்போது,  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியவர்,  மீறி செயல்படுத்தினால் மக்கள் குமுறி எழுவாளர்கள் என்றும் பழ. நெடுமாறன் மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

திருவாரூர் மாவட்டம் திருகாரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இது தொடர்பாக கடந்த ஜனவரி 26ந்தேதி குடியரசு தினத்தன்று திருவாரூர் மாவட்டம்  திருகார வாசலில் விவசாயிகள், வர்த்தகர்கள், மீனவர்கள் அனைத்து கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், தமிழக காவேரி விவசாய சங்க மாநில தலைவர் பி.ஆர். பாண்டியன் கலந்து கொண்டார்.

போராட்டம் இன்று 16வது தொடர்ந்து வருகிறது. போராட்டதில் ஈடுபட்டு வரும் கிராம மக்களை உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,  சங்க காலத்தில் இருந்தே தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா பகுதி திகழ்ந்து வருகிறது. தற்போது டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு, ஹைட்ரோகார்பன் திட்டங்களால் விளை நிலங்களை அழித்து வருகிறது.

வேளாண்மை நிலங்களை நாசமாக்கினால் இந்த மக்கள் என்ன செய்வார்கள்.

கிராம மக்களும், விவசாயிகளும் வாழையடி வாழையாக வசித்து தாங்களும் வாழ்ந்து மக்களையும் வாழ வைத்து வருகிறார்கள்.  காவிரிப் படுகையை பாதுகாப்பதற்கு தான் இப்பகுதி மக்கள் போராடுகிறார்களே தவிர சொந்த நலனுக்காக அல்ல.

எனவே ஹைட்ரோகார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். இல்லையென்றால் காவிரி டெல்டா முழுவதும் விவசாயிகள் குமுறி எழுவார்கள்.

இவ்வாறு நெடுமாறன் கூறினார்.