சென்னை: தமிழகத்தில் இன்றுமுதல் அடுத்த 5 நாள்களுக்கு அனல் காற்று வீசும் என்றும், பொதுமக்களி வெளியே வருவதை தவிருங்கள் என்று சென்னை வானிலை மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக, தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 20 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 வரை டிகிரி செல்சியல் உயரக்கூடும்.

இன்று முதல் தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழகப் பகுதி நோக்கி வீசுவதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட மூன்றிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
இதன் காரணமாக, அனல் காற்று வீசக்கூடும். பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார்  முற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வது மற்றும், ஊர்வலம் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
மத்திய அந்தமான் கடல் பகுதியில் தற்போது நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தப் பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது.
 இதன் காரணமாக இன்று மற்றும் நாளை அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தமிழகம், புதுவை கடலோர பகுதிகளில் பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இரு பகுதிகளுக்கும் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.