சென்னை

மிழகத்தில் உள்ள அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்து இணையத்தில் விவரம் பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 1968 ஆம் ஆண்டு மதுரை வடக்கு கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான 5.90 ஏக்கர் நிலத்தைப் பாண்டியன் ஹோட்டல் நிறுவனத்துக்கு ஒதுக்கியது. மொத்தம் 25 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட இந்த நிலத்துக்கான குத்தகை காலம் 2008-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.,

நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகையை நிர்ணயித்த அரசு, 36 கோடியே 58 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வாடகையைச் செலுத்தாவிட்டால், நிலம் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என 2015-ம் ஆண்டு மதுரை வடக்கு தாலுகா தாசில்தாரர் உத்தரவு பிறப்பித்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு அரசின் இந்த உத்தரவை எதிர்த்து பாண்டியன் ஹோட்டல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இவ்வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குத்தகை காலம் முடிந்தபின், அரசு நிர்ணயித்த வாடகையைச் செலுத்தாமல், 300 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தில், 14 ஆண்டுகள் அனுமதியின்றி ஹோட்டல் நடத்தி அதிக லாபம் அடைந்துள்ளதாகக் கூறி, பாண்டியன் ஹோட்டல் நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

”அரசுக்கு நிதி நெருக்கடி உள்ளதாகக் கூறும் நிலையில், அரசு நிலங்கள் குத்தகைகளை மறு ஆய்வு செய்ய வேண்டியது அரசின் கடமை. ஒரு மாதத்தில் பாண்டியன் ஹோட்டலை அப்புறப்படுத்தி, அரசு நிலத்தை மீட்க வேண்டும். வாடகை பாக்கியைக் கணக்கிட்டு உடனடியாக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ”வருவாய் நலனைப் பாதுகாக்கும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு சொத்துகள் குத்தகைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். அரசு நிலங்கள் குத்தகை விவரங்களை மாநில, மாவட்ட அளவில் ஒரு மாதத்தில் அரசு இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும்” என தமிழக வருவாய்த் துறை செயலாளருக்கும், நில நிர்வாக ஆணையருக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.