சென்னை:
சேலம் மாவட்டத்தில் கிராமங்களுக்கு குடிநீர் வசதி கிடைக்காத விவகாரம் தொடர்பாக விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் மூலம் கிடைக்கும் குடிநீர் கிடைப்பதில்லை என அனுப்பப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கொரோனா பேரிடர் நேரத்தில் குடிநீர் இல்லாமல் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது, அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளை மீறிய செயல் எனத் தெரிவித்த தலைமை நீதிபதி, குடிநீர் வசதி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் எனவும், குடிநீர் கிடைக்காவிட்டால் அதை கிடைக்கச் செய்ய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், இப்பிரச்னைக்கு தீர்வு காணும்படி அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.