சென்னை: சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த  முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் மேல்முறையீடு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

சுடுகாட்டு மேற்கூரை ஊழல்  வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம், அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்து உள்ளது.

கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில்,  உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்த T.M.செல்வகணபதி. தற்போது இவர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இருந்து வருகிறார். இவர் அதிமுக அமைச்சராக  இருந்தபோது, தமிழகம் முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் 23 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், செல்வகணபதி, ஐஏஎஸ் அதிகாரிகள் ஜெ.டி.ஆச்சார்யலு, எம்.சத்தியமூர்த்தி உள்பட 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கடந்த 2014ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை  எதிர்த்து சிபிஐ தரப்பிலும், சிறை தண்டனையை எதிர்த்து செல்வகணபதி உள்ளிட்டோர் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த  2014ஆம் ஆண்டில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள்  சுமார் 9 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், இறுதியில், உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த காலங்களில்  நடைபெற்ற விசாரணையின்போது, த ண்டனை பெறப்பட்டவர்கள் தரப்பில், பணிகள் முடித்து 3 ஆண்டுகள் கழித்து ஆய்வு செய்யப்பட்ட தாகவும், அதன் பின்னர் ஒன்றரை ஆண்டிற்குப் பிறகே அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும், சுடுகாடுகளுக்கு சுற்றுச்சுவர் இல்லாததாலும், திறந்தவெளி அமைந்திருந்ததாலும், அப்பகுதியில் உள்ளவர்களாலேயே கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.

மேலும், புகார் அளித்த வழக்கறிஞர் ரவிச்சந்திரனிடம் விசாரிக்கவில்லை என்றும், உரிய ஆய்வு நடத்தாமல் இருந்த சிபிஐ திடீரென அறிக்கை தாக்கல் செய்ததை சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதும், தண்டனை வழங்கியதும் தவறு என்பதால், தீர்ப்பை ரத்து செய்து தங்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும் வாதிடப்பட்டது.

சிபிஐ தரப்பில், ஆஜரான  வழக்கறிஞர், “மத்திய அரசு திட்ட நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. 100 சுடுகாடுகளுக்கு மேற்கூரை அமைக்க ஒப்புதல் அளித்து விட்டு, 96 சுடுகாடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதிலும் தலா 23 லட்சம் ரூபாய் தொகையை பெற்றுக் கொண்டுள்ள நிலையில், 17 லட்சம் ரூபாய் அளவிற்கு மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது” என வாதிடப்பட்டது. எனவே சிறப்பு நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை உறுதி செய்வதுடன், கூட்டுச்சதி குற்றச்சாட்டிலும் அனைவரையும் தண்டிக்க வேண்டுமென வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நவம்பர் 9ஆம் தேதி முடிவடைந்த நிலையில், வழக்குகள் மீதான தீர்ப்பை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த நிலையில்,  சுடுகாடு ஊழல் தொடர்பாக  மேல்முறையீடு வழக்குகளில் இன்று காலைநீதிபதி ஜெயச்சந்திரன் பரபரப்பு தீர்ப்பளித்தார்.

தீர்ப்பில், சிபிஐ பதிவு செய்த வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து  செய்யப்படுவதாகவும்,  கூட்டுச் சதி குற்றச்சாட்டில் இருந்தும்  செல்வகணபதியை விடுதலை செய்தும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.