சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் பிரமாண்டமான மாநாடு பிப்ரவரி 21ம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாக அதன் தலைவர்  கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: நாம் வேடிக்கை மனிதரும் அல்ல, வேடிக்கை பார்ப்பவரும் அல்ல என்பதை தமிழகம் உணர்ந்திருக்கிறது. ஊழலற்ற நல்லாட்சிக்கான வேட்கை எங்கும் நிலவுகிறது என்பதை நமது பிரச்சார பயணத்தில் கண்கூடாக பார்க்க முடிகிறது.

நான்காவது ஆண்டு துவக்க விழாவை கொண்டாடும் வகையில் நமது மகத்தான தேர்தல் வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையில் பிரமாண்டமான மாநாடு வரும் பிப்ரவரி 21ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது.

இந்த மண்ணையும், மொழியையும், மக்களையும் காக்கவே நம் களம் இறங்கி இருக்கிறோம். இந்த மகத்தான பயணத்தில் எதுவும் நமக்கு தடை இல்லை. நாம் ஒருபோதும் துவளும் தடையல்ல என்பதை தமிழகத்திற்கு உணர்ந்த மக்கள் நீதி மய்யத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த மாநாட்டில் அணிதிரள வேண்டும்.

மக்கள் உற்றார் உறவினர்கள், சுற்றத்தார், நண்பர்கள், ஒத்த கருத்தாளர்கள், அறம் சார் மனிதர்கள், நேர்மையாளர்கள், மக்கள் சேவகர்கள் புடைசூழ பிப்ரவரி 2-ம் தேதி சென்னை நோக்கி அலை அலையாய் திரண்டு வாருங்கள்.

பழி போடும் அரசியல், பழிவாங்கும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு வழிதேடும் அரசியல், வழிகாட்டும் அரசியலுக்கு துவங்க உரையை சேர்த்து எழுதுவோம். ஊர் கூடி தேர் இழுத்தால், நாளை நமதே என்று தெரிவித்துள்ளார்.