தென்காசி: விவசாயிகள் படும் துன்பம் எல்லாம் இப்போது தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிகிறதா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தென்காசியில் ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தேர்தல் பிரசாரமாக மக்களை சந்தித்து குறைகளை அவர் கேட்டறிந்தார். அப்போது அவர்கள் முன்னால் பேசியதாவது:

வேளாண் கடன்களை ரத்து செய்ய முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இப்போது தேர்தலுக்காக ரத்து செய்வதாக அறிவிக்கிறார். இந்த நம்பிக்கை துரோகத்தை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆட்சியின் கடைசி நேரம் வரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாடகமாடி வருகிறார். ஆட்சி முடியும் நேரத்தில், விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அவர் அறிவித்திருப்பது ஏன்? விவசாயிகள் படும் துயரம் எல்லாம் இப்போது தான் அவருக்கு தெரிய வந்ததா?

3 மாதங்களில் வரக்கூடிய சட்டசபை தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை சந்திக்கும். திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் அளித்துள்ள கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்படும் . கோரிக்கை நிறைவேற்றப்பட வில்லை எனில் ஒப்புகைச்சீட்டுடன் கோட்டைக்கு வந்து என்னை சந்திக்கலாம் என்று பேசினார்.