சென்னை

கோயம்பேடு அங்காடியை திருமழிசைக்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

சென்னை கோயம்பேடு அங்காடி ஆசியாவிலேயே மிகப்பெரிய அங்காடி எனப் பெயர் பெற்று 85 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த அங்காடியை திருமழிசைக்கு மாற்ற சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டு உள்ளது.

புதிய அங்காடி அமையும் இடத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் வணிக வளாகம், நட்சத்திர ஓட்டல், பொழுதுபோக்கு இடம் என்று பிரமாண்டமாக வடிவமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதையொட்டி உலகளாவிய ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான குஷ்மேன் மற்றும் வேக் பீல்டு நிறுவனத்திடம் கட்டுமான வடிவமைப்பைத் தயார்  செய்யும்படி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) கேட்டுக்கொண்டுள்ளது.

அதே வேளையில்  கோயம்பேடு அங்காடியை மறுசீரமைப்பு செய்து வேறு எந்த பயன்பாட்டுக்காக உபயோகிக்கலாம் என்பதை கண்டறியவும், அங்காடியை முழுவதுமாக திருமழிசையில் அமைக்கலாமா? பாதியை மட்டும் அங்கு கொண்டு செல்வதா? என அனைத்து சாத்தியக் கூறுகளையும் ஆய்வு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

தற்போது கோயம்பேடு அங்காடியில் இருக்கும் கடைகளை மொத்த வியாபாரிகள் சொந்தமாக வாங்கி வைத்திருக்கிறார்கள். அவர்களை திருமழிசைக்கு மாற்றும்போது அதற்கான இழப்பீடு தொகையையும் வழங்க சி.எம்.டி.ஏ. முடிவு செய்து உள்ளது.

சி எம் டி ஏ வியாபாரிகளின் உரிமையைப் பாதுகாத்து அவர்களுக்குச் சரியான இழப்பீட்டையும் வழங்கும் போது தாமாகவே இடம் பெயர ஒத்துக்கொள்வார்கள் எனக் கருதுவதாக கூறப்படுகிறது..

கனரக வாகன போக்குவரத்து, பாதசாரிகள் நடமாட்டம் காரணமாக கோயம்பேடு நெரிசலாகி விட்டதால் இந்த பகுதியை வணிக வளாகம், நட்சத்திர ஓட்டல், விளையாட்டு மைதானம் போன்றவை அமைக்க முடிவு செய்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் இருந்து வருபவர்களை கவரும் இடமாக கோயம்பேடு மாறும்.

மேலும் கோயம்பேட்டை பொறுத்தவரை மெட்ரோ ரயில் போக்குவரத்தின் முதல் மற்றும் 2-ம் கட்ட திட்டப்பணியை இணைக்கும் பகுதியாக இருக்கிறது.

சென்னை கோயம்பேடு அங்காடி மூலம் ஆண்டுக்கு ரூ.12 கோடி வருமானம் கிடைக்கிறது. அங்காடி பராமரிப்புக்குச் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆண்டுக்கு ரூ.11.70 கோடி செலவிடுவதால் லாபம் 0.30 கோடி மட்டுமே கிடைப்பதால் இந்த ஆலோசனை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.