சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துவது குறித்து  தமிழகஅரசு பரிசீலனை செய்துவருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. புதிதாக CPS திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் இருந்து 10% வழங்க வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் போராட்டத்தில் முக்கிய கோரிக்கையாக இதனை முன்வைத்து வந்தனர்.

திமுக தேர்தல் வாக்குறுதியில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அறிவித்தது. அதன்படி, திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுதும்,  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டம்  குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் ஆய்வறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்த  தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டம் முதல்வரால் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மிகவும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.