சென்னை: பாலியல் வழக்கு காரணமாக  டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, சென்னை அழைத்து வரப்பட்டார். அவர் தன்னை அடையாளம் தெரியாதவாறு, மொட்டை தலையுடன் டெல்லியில் பிடிப்பட்ட நிலையில்,  நள்ளிரவு சென்னைக்கு  அழைத்து வரப்பட்டு உள்ளார்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில், சுஷில் ஹரி என்ற பெயரில் சர்வதேச பள்ளி  நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா. இவர்மீது, பள்ளி மாணவிகள் பாலியல் புகார் செய்து இருந்தனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையில், சிவசங்கர் பாபா தலைமறைவானார். அவர் டேராடூன் பகுதியில் இருப்பதாக கூறப்பட்டது. அவரை கைது செய்ய அங்கு சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏமாற்றம் அரைடந்தனர். இந்த நிலையில், அவர் டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கிருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை அழைத்து வந்துள்ளனர்.

டெல்லியில் இருந்து நேற்று இரவு 11.50 மணிக்கு சென்னை வந்தார். பின்னர் போலீஸ் ஜீப்பில் ஏற்றி கொண்டு விமான நிலையத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர். அங்கு சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இன்று காலை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.