சென்னை: சென்னையில் சொத்து வரியை, வரும் 15-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5%  ஊக்கத்தொகை வழங்கப்படுமென சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழக அரசு மாநிலம் முழுவதும் சொத்து வரியை 25 சதவிகிதத்தில் இருந்து 150 சதவிகிதம் வரை உயர்த்தி உள்ளது. இது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சி  600 சதுரஅடி முதல் 1200 சதுரஅடி வரை 75 சதவீத சொத்து வரி உயர்த்தப்பட இருக்கிறது. ஏற்கெனவே, 600 சதுரஅடிக்கு ரூபாய் 810 சொத்து வரி செலுத்தியவர்களுக்கு ரூ.1215 உயர்த்தப்பட்டிருக்கிறது. 1201 சதுரஅடி முதல் 1800 சதுரஅடி வரை 100 சதவீதத வரி உயர்வும், 1801 சதுர அடிக்கு மேலாக உள்ள வீடுகளுக்கு 150 சதவீத சொத்து வரி உயர்வும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், வணிக வளாகங்களுக்கு 150 சதவீத வரி உயர்வும், கல்வி நிலையங்களுக்கு 100 சதவீத வரி உயர்வும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி மக்களிடம் இருந்து சொந்து வரியை வசூலிக்க நூதன முறையை கையாண்டு வருகிறது. ஏப்ரல் 15ந்தேதிக்குள் வரி கட்டினால் அவர்களுக்கு 5% இன்சென்டிவ் (ஊக்கத்தொகை) வழங்கப்படும் என தெரிவித்த உள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், உங்களுடைய சொத்து வரியை செலுத்தி 5 சதவகிதம் தொகையை சலுகையாக பெற ஏப்ரல் 15ந்தேதி கடைசி நாள். வரும் 15 ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்த தவறினால் 2% அபராதம் கூடுதலாக வசூலிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

சொத்துவரியை மண்டல அலுவலகங்கள், வாா்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், மாநகராட்சி இணையதளம், நம்ம சென்னை ஆப், பேடிஎம்  , கிரெடிட் அல்லது டெபிட் காா்டு மூலம் செலுத்தலாம் என்றும் அறிவித்து உள்ளது.