சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வந்த, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

தலைநகர் சென்னையில் அதிமுக சார்பில் செய்தியாளர்களை சந்தித்து, அதிரடி கருத்துக்களை தெரிவிப்பவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இவர் 19ந்தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு அன்று கள்ளஓட்டுப்போட வந்த திமுக நபரை பிடித்து, அரைநிர்வாணமாக அழைத்து சென்றது தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்து வருகின்றன. ஏற்கனவே  ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்த மான இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி, வழக்குகளை பதிவு செய்துள்ள  நிலையில், அவர்கள் எப்போதும் கைது செய்யப்படலாம் என நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், திமுக அரசை கடுமையாக விமர்சித்து வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கினற்ன.

ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில் திமுக அரசுக்கு எதிராக விழுப்புரத்தில்  நடைபெற்ற கண்டன போராட்டத்தின்போது,  முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு தமிழக அரசை கடுமையாக சாடினார். அப்போது, திமுக ஆட்சியில், அரசு அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள், தற்கொலைக்குத் தூண்டப்படுகிறார்கள் என்று குற்றம்சாட்டினார். மாரிதாஸ், அரசின்மீது அவதூறு பரப்புகிறார் என்று சொல்லி அவரைக் கைது செய்கிறீர்கள்.

இந்த ஆட்சியிலே சட்டம், ஒழுங்கு சரியில்லாமல் இருக்கிறது. கொலைகள், பாலியல் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் இவற்றை தடுக்க வேண்டிய தமிழக டிஜிபி டி.ஜி.பி சைலேந்திரபாபு சைக்கிள் ஓட்டுகிறார். சைக்கிள் ஓட்டுவதுதான் அவருக்கு வேலையா?  என்று கேள்வி எழுப்பியதுடன், தமிழ்நாட்டில். அமைச்சர்கள் செயல்பட யாருக்கும் அனுமதி இல்லை. அவர்கள் பேருக்கு மட்டுமே அமைச்சர்கள் உள்ளனர். ஒரேயோர் அமைச்சருக்கு மட்டும் வேலை உண்டு என்று அமைச்சர் எ.வ.வேலு பெயரை குறிப்பிட்டு அவர் தாக்கினார். இது தொடர்பாக அவர்மீது புகார்கள் பதியப்பட்டது.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கடந்த வாரம் விழுப்புரம் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெடற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்  உரையாற்றியபோது, கூட்டத்தில் ஒருவர் சண்முகத்தை பார்த்து  பிரச்சாரத்தை நிறுத்தும்படி சொல்லிது சர்ச்சையானது.  இதுகுறித்து அவரை ஒருமையில் பேசிய சண்முகம், காவல்துறை தற்போது ஏவல்துறையாக உள்ளது என்று விமர்சித்தார்.

இதையடுத்து விழுப்புரம் மேற்கு காவல்நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற வழக்கள் காரணமாக, சி.வி.சண்முகம் விரைவில் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.