சென்னை: மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து முதல்வர்காப்பீட்டு திட்டத்தில், இளம்பெண் ஒருவருக்கு நவீன செயற்கை கால்களையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்துகளை வழங்குதல், பிசியோதெரபி சிகிச்சை வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகளை வழங்குதல், காய்ச்சல் உள்ளிட்டவற்றுக்கு அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன

இதுவரை இத்திட்டத்தின் வாயிலாக பயனடைந்த பயனாளிகளின் எண்ணிக்கை 50 லட்சம் என்ற இலக்கை சுகாதாரத்துறை எட்டியுள்ளது. இந்தநிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாலப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 50 இலட்சமாவது பயனாளிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகங்களை வழங்கி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்

 தொடர்ந்து  சித்தாலப்பாக்கத்தில், மருத்துவம் மற்றும் 108 அவசரகால ஊர்திகள் சேவையை மேலும் வலுப்படுத்த 69.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக 188 அவசரகால புதிய வாகனங்களின் சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாலப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நவீன செயற்கை கால்களை, விபத்தினால் கால்களை இழந்த பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதேபோல், சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான சிகிச்சை செலவை அரசே ஏற்கும் வகையில் செயல்படுத்தப்படும் இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் இதுவரை 21ஆயிரம் பேர் பயன் பெற்றிருக்கின்றனர். இதற்காக 19 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் என மொத்தம் 640 மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

தமிழகத்தில் தற்போது செயல்படக்கூடிய ஆம்புலன்ஸில்களின் எண்ணிக்கை 1491 ஆக அதிகரித்துள்ளது.