சென்னை

சௌகார்பேட்டையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.

சென்னையில் உள்ள சௌகார்பேட்டை  மிண்ட் தெருவில் ஒரு தனியார் வணிக வளாகம் உள்ளது.  இதில் துணிக்கடைகள் உள்ளிட்ட 12 கடைகள் உள்ளன.   இந்த வணிக வளாகத்தின் கீழ்த் தளத்தில் உள்ள துணிக்கடை மற்றும் பாத்திரக்கடைகளில் இருந்து கடும் புகை வெளியானதால் அதிர்ச்சி ஏற்பட்டது.

இந்த தீ மளமளவென வளாகம் முழுவதும் பரவத் தொடங்கியது.  தகவல் அறிந்த வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 9 தீயணைப்பு படை வாகனங்கள் இங்கு விரைந்தன.  மேலும் அதி நவீன ஸ்கை லிஃப்ட் தீயணைப்பு வாகனமும் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்க கடும் போராட்டம் நடந்தது. 

சுமார் 3 மணி நேரப்போராட்டத்துக்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுக்குள் வந்தது.  வணிக வளாக தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் இத தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.