சென்னை

நாளை முதல் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாமல் நிலையத்தில் வண்டியை நிறுத்துவோருக்குக் கட்டண உயர்வு அமலாகிறது.

சென்னை நகர போக்குவரத்து நெருக்கடியை மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்து குறைத்துள்ளது. இதில் மெட்ரோ ரயில் நிலையத்தில் வண்டிகளை நிறுத்த பார்க்கிங் கட்டணமாக 6 மணி நேரம் வரை ரூ.10-ம் 12 மணி நேரம் வரை ரூ.15-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மெட்ரோ ரயில் நிர்வாகம் நாளை முதல் பார்க்கிங் கட்டணத்தை ஒரு மடங்கு அதிகமாக உயர்த்தி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது 6 மணி நேரம் வரை ரூ.20, 12 மணி நேரம் வரை ரூ.30, 12 மணி நேரத்துக்கு மேல் ரூ.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் மாதாந்திர கட்டணமும் 6 மணி நேரத்துக்கு ரூ. 500-ல் இருந்து ரூ.750 ஆகவும், 12 மணி நேரத்துக்கு ரூ.1000-ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

மெட்ரோ ரயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதில் பாரபட்சம் காட்டுவது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மெட்ரோ ரயிலில் பயணித்தால் கட்டணத்தில் சலுகை அதாவது பழைய கட்டணமே வசூலிக்கப்படும்.

அதே வேளையில் மின்சார ரயிலில் பயணிப்பவர்களுக்கு இந்த சலுகை கிடைக்காது. அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த இரண்டு நிறுவனங்களும் அரசு நிறுவனங்கள் என்றாலும் இதில் பயணிகளிடம் பாகுபாடு காட்டப்படுகிறது என்று மின்சார ரயில் பயணிகள் தெரிவித்துள்ளனர்.