சென்னை:

ள்ளிகளில் நடைபெறும் காலை வணக்க கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் அதன் தடுப்பு முறைகள் குறித்து மாணவர்களுக்கு காலை வணக்க கூட்டத்தில் ஆசிரியர்கள் விளக்க வேண்டும் என்று  ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பள்ளிகளில் நடைபெறும் காலை வணக்க கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் தடுப்பு முறைகள் சார்ந்து தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும்.

பள்ளி வளாகத்திலும் வீடுகளிலும் நீர் தேங்கா வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொண்டு டெங்கு கொசுக்கள் உருவாகாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

ஊரக வளர்ச்சித்துறையின் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களை கொண்டு பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்தும் பணியினை மேற்கொள்ள வேண்டும்.

நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், சாரண, சாரணியர் இயக்கத்தை சேர்ந்த மாணவர்கள், தேசிய மாணவர் படை, பசுமைப்படை மாணவர்கள் மற்றும் இளம் செஞ்சிலுவை சங்கம் மாணவர்களை சுகாதார தூதுவர்களாக பள்ளியை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியினை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். பள்ளி மற்றும் வீடுகளில் வீணாக தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்துதல், தூய்மையான வைத்து கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மாணவர்களும், ஆசிரியர்களும் உறுதி மொழி எடுக்க வேண்டும்.

பள்ளிக்கு மாணவர்கள் காய்ச்சலோடு வந்தாலோ, பள்ளிக்கு வந்த பின்பு காய்ச்சல் ஏற்பட்டது என்றாலோ அதை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதை மாணவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.

அவ்வாறு காய்ச்சல் ஏற்பட்டு பள்ளியில் இருந்தால் அம்மாணவர்களின் பெற்றோர்களுக்கோ, பாதுகாவலருக்கோ தெரிவித்து பின்பு அம்மாணவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கோ அழைத்து செல்ல வேண்டும்.

சுகாதாரம் மற்றும் தூய்மையின் முக்கியத்துவத்தின் அறிவுரைகளால் மாணவர்களிடம் காணப்படும் மாற்றம் அவர் தம் பெற்றார்களுக்கு முன் உதாரணமாக இருக்கும்.

அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இந்த அறிவுரைகளை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தவறாது பின்பற்றுமாறு அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.