“ஆளுநருக்கு மரியாதையும் தெரியவில்லை நெறிமுறைகளும் தெரியவில்லை தமிழக சட்டமன்றத்தில் ஆர்.என். ரவி உரை நிகழ்த்துவது இதுவே கடைசி முறை” என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று துவங்கியது.

இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய ஆளுநர் ஆர்.என். ரவி மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசின் உரையில் இடம்பெற்றிருந்த கருத்துக்கள் மற்றும் முக்கிய பகுதிகளை படிக்காமல் தவிர்த்தார்.

தவிர, ஆளுநர் உரை துவங்குவதற்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தனது பேச்சின் இடையே தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.

அதில், “தமிழ்நாட்டில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்படுவதும் மரபு.

பள்ளி குழந்தைகள் தொடங்கி அனைவருக்கும் தெரிந்த இந்த விஷயம் கவனருக்கு மட்டும் தெரியாமல் போனது எப்படி என்று தெரியவில்லை” என்று கூறினார்.

மேலும், தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே அவையை விட்டு வெளியேறியது மரபை மீறிய செயல் என்று தெரிவித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “ஆளுநருக்கு மாரியாதையும் தெரியவில்லை நெறிமுறையும் தெரியவில்லை” என்று காட்டமாக கூறினார்.