மயிலாடுதுறை:

யிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் பிரமுகர் இல்லத் திருமணத்தில் கலந்துகொண்ட தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,  காவிரிப் பிரச்னையில் தமிழர்களை முதல்வர் எடப்பாடி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ஏமாற்றுகிறார்கள் என்றும்,  மத்தியஅரசும் தமிழக மக்களை ஏமாற்றுகிறது என  கடுமையாக விமர்சனம் செய்தார்.

மேலும், காவிரி விவகாரத்தில்,  உச்ச நீதிமன்றம் 6 வார காலம் அவகாசம் கொடுத்தும், மத்திய அரசு  அலட்சியப்படுத்திவிட்டது என்று குற்றம் சாட்டியவர், விரைவில் மோடி தமிழகம் வர உள்ளார். அப்போது அவருக்கு தமிழக மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் என்று கூறினார்.

பா.ஜ.க-வின் காலடியில் தமிழக ஆளும் கட்சி விழுந்துகிடக்கிறது. பல நாள்களாக தமிழ்நாட்டை ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். ஏமாற்றி வருகிறார்கள் என்றும்,  உண்ணாவிரதம் இருந்து கபட நாடகம் ஆடுகிறார்கள். இனி அவர்கள் பருப்பு வேகாது என்று தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள் நடக்கின்றன. அதற்குத் தீர்வு சொல்ல முடியாமல் பா.ஜ.க-வினர் தவிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியவர், தமிழிசையோ, காவிரிப் பிரச்னைக்கு 3 வார காலத்தில் தீர்வு காணப்படும் என்கிறார்.

பா.ஜ.க-வினருக்குப் பொய் சொல்வதே வழக்கமாகிப் போச்சு. பெரியாரைப் பற்றி எச். ராஜா இழிவாகப் பேசுகிறார். பெரியாரின் பெருமைகளை அவரது பேரனாகிய நான் சொன்னால் நன்றாக இருக்காது.

இப்போது, பா.ஜ.க-வினரின் நிலைமை எப்படி இருக்கிறது என்றால், ஒரு வீட்டுக்குள்ள திருடனும், எச். ராஜா, தமிழிசை மூவரும் போனால், திருடனை விட்டுவிடுவார்கள், எச். ராஜாவையும் தமிழிசையையும் பிடித்து அடிப்பார்கள். அவர்கள் நிலைமை இப்படியாகிப் போச்சு” என்று கூறினார்.