சென்னை: யானைகள் வழித்தடத்தில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், மசினக்குடி பகுதியில் உலாவிய ரிவால்டோ என்னும் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானையை வனத்துறையினர், யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தனர். இந் நிலையில், யானையை பிடிக்க வனத்துறையினருக்கு தடை விதிக்குமாறு விலங்குகள் நல ஆர்வலர் முருகவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரிவால்டோ யானை குணமடைந்து விட்டதாகவும், இந்த யானையால் எவரும் காயமடையவில்லை, எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதால் யானையை பிடிக்கக் கூடாது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், யானையை பிடித்து சிகிச்சை அளித்த பின்னர் மீண்டும் வனப் பகுதியிலேயே விடப்படும் என்று அரசு தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது. அரசின் உறுதியை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம்,  தமிழகத்தில் வளர்ப்பு யானைகள் அதிகளவில் இருப்பதாகவும், காட்டு யானைகள் மற்றும் வளர்ப்பு யானைகளின் கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்கப்படும் என்றும் தெரிவித்தது.

யானைகள் வழித்தடங்களில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.