சென்னை: 
சென்னையில் மின்சார ரயில்கள் நாளை வழக்கமான வார நாட்கள் கால அட்டவணையின்படி இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் 2015-ம் ஆண்டுக்குப் பின்னர் மிக அதிகமான கனமழை கொட்டியது. கடந்த சில நாட்களாக விடிய விடியக் கனமழை கொட்டி வெளுத்தது. சென்னையில் இயல்பைவிடக் கூடுதல் மழைப் பதிவாகி உள்ளது.
இந்த மழை காரணமாகச் சென்னையில் மின்சார ரயில் சேவைகளும் இன்று பாதிக்கப்பட்டன. தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழித்தடத்தில் தண்டவாளத்தில் மழை வெள்ளம் சூழ்ந்து நின்றது. இதனால் முதலில் ரயில்கள் மிக மெதுவாக இயக்கப்பட்டன. பல இடங்களில் நடுவழியிலேயே ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பரிதவித்தனர்.
தற்போது மழை சற்று குறைந்து உள்ளதை அடுத்து சென்னையில் மின்சார ரயில்கள் நாளை வழக்கமான வார நாட்கள் கால அட்டவணையின்படி இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.