சென்னை 

மலக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்று காலை முதல் சென்னை, அண்ணா நகரில் உள்ள தணிக்கையாளர் சண்முகராஜ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முகப்பேர் கிழக்குப் பகுதியில் உள்ள பொதுப்பணி திலகம் என்ற பொறியாளர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதைப் போல் திண்டுக்கல்லில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இங்குத் தொழிலதிபர் ரத்தினம், அவரது மைத்துனர் வீடுகள் மற்றும் தொழிலதிபர் கோவிந்தன் என்பவர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தவிர புதுக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன் என்பவருடைய அலுவலகம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் விளாத்திகுளத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. இங்கு மணல் சுரங்கம், மணல் கொள்ளை, சட்டவிரோத சுரங்க முறைகேடு உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.