சென்னை: தமிழ்நாட்டில் சமீப காலமாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதும், லாக்கப் மரணங்களும்  கடுமையான விமர்சனங்களை எழுப்பிய இருக்கும் சூழலில், நாளை  காவல் ஆணையர்கள் மற்றும் மண்டல ஐஜிகள் உயர்அதிகாரிகளுடன்  டிஜிபி சைலேந்திரபாபு நாளை ஆலோசனை நடத்துகிறார்.

தமிழக டிஜிபியாக சைலேந்திரபாபு பதவியேற்ற பிறகு முதல்முறையாக நாளை காவல் ஆணையர்கள் மற்றும் மண்டல ஐஜிக்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆய்வு கூட்டத்தில், கொலை, கொள்ளை, வன்முறை சம்பவங்களை தடுப்பது, கஞ்சா உள்பட போதை பொருட்கள் விற்பனை, ரவுடிகளை ஒழிக்க மேற்கொள்ளப்பட்டு வரும்  நடவடிக்கைகள் குறித்தும், மேலும் என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பதும் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினற்ன.

அத்துடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த ஒரு ஆண்டில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் விவரம், அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைள் என்ன, எவ்வளவு பொருட்கள் இதுவரை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறித்தும் விவரம் கோரப்பட்டு உள்ளதாகவும், அதுகுறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி, சமீப காலமாக அதிகரித்து வரும் சைபர் கிரைம்  குற்றங்கள் தொடர்பான  வழக்குகளை மேம்படுத்துவது குறித்தும், ஆலோசிக்கப்பட உள்ளது. அத்துடன் சாலை விபத்துகளை தடுக்கவும், சாலை பாதுகாப்பு தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.