டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளும் வகையில், திறக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்ற உத்தரவிட்டது. அடுத்த விசாரணை ஜூலை மாதம் நடைபெறும் என அறிவித்தது.

தூத்துக்குடி பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்களை கொடுத்து வந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, காவல்துறையினரின் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.  இதில் கொடூரமான சம்பவத்தில் 13 நபர்கள் கொல்லப்பட்டனர். பலரும் காயமடைந்தனர். இதனை அடுத்து, உடனடியாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆலையை திறக்க வலியுறுத்தி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனுக்களை தாக்கல் செய்து வருகிறது.

தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில்,  ஆலையில் உள்ள இயந்திர உபகரணங்கள் துருப்பிடித்து சேதமாகும் நிலையில் உள்ளதால் ஆலை பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தரப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழக அரசு பதில் அளித்ததுடன்,  ஸ்டெர்லைட் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கிடையில், வேதாந்தா நிறுவனம் சார்பில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு இரண்டு முறை பட்டியலிடப்பட்டும் விசாரிக்கப்படவில்லை எனவே வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியது.

இந்த வழக்கு  இன்று உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையில் ஏராளமான ஜிப்சம் நீக்கப்படாமல் உள்ளது என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு பதில் கூறிய வேதாந்தா நிறுவனம், 11 மில்லியன் டன் ஜிப்சம் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால்,  மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பு, 5 மில்லியன் டன் ஜிப்சம் மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஸ்டெர்லைன் ஆலையை பராமரிப்பு பணிக்காக திறக்க வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் வேதாந்தா வின் இடைக்கால மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை மாதத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.