சென்னை:
நீட் தேர்வு வேண்டாம் என்பது திமுகவின் உறுதியான நிலைப்பாடு என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்தக் குழுவில் ஏ.கே. ராஜன் தலைமையில் 8 உறுப்பினர்கள் கடந்த 10 ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டனர். உறுப்பினர்களாக மருத்துவத்துறைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர், சட்டத்துறைச் செயலாளர், டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், ஜவஹர் நேசன் உள்ளிட 8 பேர் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நீட் தேர்வில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் மக்களின் கருத்தையும் இக்குழு கேட்க இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து neetimpact2021@gmail.com என்ற இணைய முகவரியில் கருத்து கூறலாம் என்றும் வரும் 23-ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை அனுப்பி வைக்கலாம் எனவும் ஏ.கே. ராஜன் குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வு வேண்டாம் என்பது திமுகவின் உறுதியான நிலைப்பாடு என்றும், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.