சென்னை: ”உழவர்களுக்கானது திமுக ஆட்சி, மண்ணையும் மக்களையும் காப்பதில் எப்போதும் யாருக்கும் சளைக்காத ஆட்சி தான் திமுக ஆட்சி . நாட்டிலேயே விரைவாக செயல்படும் அரசு தமிழ்நாடு அரசு  என ஒரு லட்சம் விவசாயிகளுக்கான புதிய மின் இணைப்பு திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் உரையாற்றினார். அவர் பேசியதாவது,

மே மாதம் 7 ஆம் தேதி நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டேன். அன்று முதல் இன்று வரை தினந்தோறும் ஏராளமான திட்டங்களை அறிவித்தும் தொடங்கி வைத்தும், பயனாளிகளுக்கு வழங்கியும் வருகிறேன். ஒவ்வொரு அமைச்சர்களும் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகிறார்கள். என்னால் தேதி கொடுக்க முடியாத அளவுக்கு அனைவரும் தங்கள் துறை சார்பில் ஏராளமான திட்டங்களைத் தொடங்கிக் கொண்டு இருக்கிறார்கள். வழக்கம் போல செந்தில்பாலாஜியும் வேகமாக முந்திக் கொண்டு தேதியை வாங்கி இந்தத் திட்டத்தை தொடங்கி விட்டார்.

சில திட்டங்கள் அந்த நேரத்துக்கு தேவையானதாக இருக்கும். சில திட்டங்கள் சில ஆண்டுகளுக்கு தேவையானதாக இருக்கும். சில திட்டங்கள்தான் தலைமுறைக்கு பயனுள்ளதாக இருக்கும். அந்த வரிசையில் தலைமுறை தலைமுறைக்கு பயனுள்ளதான திட்டம்தான் ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கக் கூடிய திட்டம் ஆகும். அதிலும் குறிப்பாக விவசாயிகள் பயன்பெறுகிறார்கள் என்றால், தங்களுக்கு மட்டுமல்ல, இந்த மாநிலத்து மக்களுக்கே உணவுப் பொருளை உற்பத்தி செய்து தரப்போகிறார்கள். அத்தகைய மகத்தான திட்டம்தான் இந்த திட்டம்.

கடந்த 2006 -11 தி.மு.கழக ஆட்சி காலத்தில் 2 இலட்சத்து 9 ஆயிரத்து 910 பேருக்கு புதிய மின் இணைப்புகள் தரப்பட்டது. ஆனால் 2011 -16 அதிமுக ஆட்சியில் 82 ஆயிரத்து 987 பேருக்கும், 2016-21 அதிமுக ஆட்சியில் 1 இலட்சத்து 38 ஆயிரத்து 592 பேருக்கும் தான் புதிய இணைப்புகள் தரப்பட்டன. அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்குமான வேறுபாடு என்பது இதுதான். பத்து ஆண்டு காலத்திலே சுமார் 2 லட்சம் இணைப்புகள்தான் அதிமுக ஆட்சியில் தரப்பட்டுள்ளன.

ஆனால் ஆட்சிக்கு வந்த நான்கு மாத காலத்தில் ஒரு லட்சம் இணைப்புகளை நாம் கொடுக்கப் போகிறோம். இதை விட வேகமான ஆட்சி இந்தியாவில் இருக்க முடியாது என்கிற அளவுக்கு நாம் செயல்பட்டு வருகிறோம். திமுக ஆட்சி என்பதே விவாயிகளின் ஆட்சியாக, வேளாண்மை புரட்சி செய்யும் ஆட்சியாகத்தான் எப்போதும் இருந்துள்ளது. மண்ணையும் மக்களையும் காப்பதில் எப்போதும் யாருக்கும் சளைக்காத ஆட்சி தான் திமுக ஆட்சி.

இதற்கு ஒரு உதாரணம், சில நாட்களுக்கு முன்னால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக துணிச்சலாக தீர்மானம் நிறைவேற்றிய ஆட்சி திமுக ஆட்சி என்பதை விவசாயப் பெருமக்கள் மறக்க மாட்டார்கள். காவிரி போன்ற பெரிய பிரச்னையாக இருந்தாலும் – வேளாண் மக்களின் சிறு கோரிக்கையாக இருந்தாலும் அதற்கு உடனடியாகச் செவி மடுத்து அதனை நிறைவேற்றித் தரும் ஆட்சி தான் திமுக ஆட்சி.

தலைவர் கலைஞர் அவர்களே சொல்வார்கள், ‘நான் பிறந்தபோதுதான் காவிரி ஒப்பந்தமும் உருவானது’ என்று சொல்வார்கள்.அந்த காவிரி பிரச்னையைத் தீர்ப்பதற்காக முழு முயற்சி எடுத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

காவிரி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1971 ஆம் ஆண்டு தீர்மானமும் நிறைவேற்றினார்கள்.

உச்ச நீதிமன்றத்தில் காவிரி பிரச்னை தொடர்பான வழக்கையும் போட்டார்கள்.

பிரதமர் வி.பி.சிங் அவர்களிடம் வலியுறுத்தி காவிரி நடுவர் மன்றத்தை 1990ஆம் ஆண்டு அமைக்க வைத்தவர் கலைஞர்.

இறுதித் தீர்ப்புக்கு முன்னால் இடைக்காலத் தீர்ப்பை வாங்கியவர் கலைஞர்.

பிரதமர் வாஜ்பாயை வலியுறுத்தி 1997 ஆம் ஆண்டு காவிரி கண்காணிப்பு ஆணையம் அமைக்கக் காரணமாக இருந்தவர் கலைஞர்!

காவிரி இறுதித் தீர்ப்பும் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோதுதான் – 2007 ஆம் ஆண்டு வந்தது. 192 டி.எம்.சி.தான் என்று தான் தீர்ப்பு வந்தது. அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு அனைவர் முடிவின் படி நீதிமன்றத்துக்கும் போனோம்.

2006ம் ஆண்டு தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 7000 கோடி கடன் ரத்து செய்தவர் முதல்வர் கலைஞர் அவர்கள். பதவி ஏற்பு விழா மேடையிலேயே 7000 கோடி கடனையும் ரத்து செய்யப்பட்டது.

நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலம் வழங்குவேன் என்று சொன்னார்கள். அந்த அடிப்படையில் நிலம் வழங்கப்பட்டது.

1 லட்சத்து 89 ஆயிரத்து, 719 ஏக்கர் நிலத்தை – 1 லட்சத்து 50 ஆயிரத்து 159 பேருக்கு வழங்கிய ஆட்சி தான் கழக ஆட்சி. இவை அனைத்துக்கும் மேலாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அறிவித்ததும் முதல்வர் கலைஞர் அவர்களே!

1978 ஆம் ஆண்டு முதல் விவசாயிகள் மின் கட்டணத்தில் சலுகை கேட்டு போராடினார்கள். 1990 ஆம் ஆண்டு மின் கட்டணத்தில் சலுகை அல்ல, மின் கட்டணமே விவசாயிகளின் பம்பு செட்டுகளுக்கு இல்லை என்று அறிவித்தவர் முதல்வர் கலைஞர்!

இந்த வரிசையில் ஒரு லட்சம் புதிய இணைப்புகள் என்ற இந்த புதிய திட்டம் இன்றைய தினம் தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.