திண்டுக்கல்:

ராஜ்யசபாவுக்கு செல்ல  திமுக எனக்காகவே ஒரு சீட் ஒதுக்கியது; மதிமுகவுக்காக அல்ல, இது எழுதப்படாத ஒப்பந்தம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்தார்.

மாநிலங்களவைக்கான தேர்தலில் திமுகவுக்கு 3 இடங்கள் கிடைக்கும் நிலையில், ஏற்கனவே திமுக சார்பில்  2 வேட்பாளர்களும், கூட்டணி கட்சியான மதிமுக சார்பில் வைகோவும்  வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், திமுக தரப்பில் இன்று 3வது மூத்த வழக்கறிஞர் இளங்கோவும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இது தமிழகஅரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார் வை.கோ.

இன்று, திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், திமுக தலைவர் ஸ்டாலின் என்னை தொடர்புகொண்டு, மாநிலங்கள வைக்கு நீங்கள் செல்வதாக இருந்தால்தான் மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பு மதிமுகவுக்கு வழங்கப்படும் என கூறியதாகவும்,   அதையடுத்து, மதிமுக நிர்வாகிகள் அனைவரும் நான் மாநிலங்களவைக்கு செல்ல வேண்டும் என ஒட்டுமொத்தமாக விரும்பியதன் பேரில், அதனை நான் ஏற்றுக்கொண்டேன் என்று தெரிவித்தார்.

மேலும், அப்போது, தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தையின்போது,. இது எழுதப்படாத ஒரு ஒப்பந்தம் என்று தெரிவித்தவர், இதை  தேர்தல் ஒப்பந்தத்தில் நாங்கள் குறிப்பிடவில்லை என்று விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், என் மீதான தேசத்துரோக வழக்கில் பிரிவு 124 ஏ-ன் கீழ் எனக்கு தண்டனை கிடைத்துள்ளது. இந்த வழக்கில் எனக்கு தண்டனை வராது என நான் நம்பியது உண்மை. காரணம், சுதந்திரத்துக்கு முன்புதான் காந்தியும், பாலகங்காதர திலகரும் இந்த பிரிவின் கீழ் தண்டிக்கப்பட்ட னர். பாலகங்காதர திலகர் சிறையில் இருந்தபோது, நேரு உட்பட அனைவரும், பிடிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தில் இந்தியா இருந்தபோது இருந்த இந்த கொடுமையான பிரிவை நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். சுதந்திரத்திற்கு பிறகும் கூட இந்த பிரிவு நீக்கப்பட வேண்டும் என நேரு வலியுறுத்தினார். ஆனால், நீக்கப்படவில்லை.

ஆனால், இன்றுவரை இந்தியாவில் இந்த சட்டப்பிரிவின் கீழ் யாரும் தண்டிக்கப்படவில்லை. வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் விடுதலையாகினர். ஆனால், எனக்கு ஓராண்டு கால தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியாவிலேயே பொடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட ஒரே நாடாளுமன்ற உறுப்பினராக நான் இருந்தேன். இப்போது சுதந்திர இந்தியாவில் இப்பிரிவின் கீழ் தண்டனை பெறும் நபராகவும் நான் இருக்கிறேன்.

காந்தியின் உருவபொம்மையை சுட்டுக் கொன்றவர்களும் நாதுராம் கோட்சேவுக்கு சிலை எழுப்ப வேண்டும் என சொல்பவர்களும் தேச பக்தர்களாக இருக்கின்றனர். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8 (1)-ன் கீழ், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின்கீழ் போதைப்பொருள் மற்றும் பெண்களுக்கு கேடு விளைவிக்கும் சட்டப் பிரிவுகளின்கீழ், மத பிரச்சினைகள் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்பட்டாலோ, அபராதம் மட்டும் விதிக்கப்பட்டாலோ கூட அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.

மக்கள் பிரதிநித்துவச் சட்டம் பிரிவு 8 (2)-ன்கீழ் உள்ள சட்டப்பிரிவுகளில் தண்டிக்கப்பட்டாலும் அவர்கள் போட்டியிட முடியாது. சில வழக்குகளில் அபராதம் இருந்தாலே போட்டியிட முடியாது. மக்கள் பிரதிநித்துவ சட்டம் 8 (3)-ன் படி, எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் இரண்டாண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டிக்கப்பட்டல் போட்டியிட முடியாது.

அதனால், என் வேட்பு மனு நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். இருந்தபோதிலும், ஏற்கெனவே எங்களுக்குள் செய்துகொள்ளப்பட்ட எழுதப்படாத ஒப்பந்தத்தின் படி, இத்தீர்ப்பு வருவதற்கு முன்பே ஸ்டாலினை நேரில் சந்தித்து நான் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால், ஒரு மாற்று ஏற்பாட்டை நீங்கள் செய்துகொள்ளுங்கள் என்று நான் தான் ஸ்டாலினிடம் வலியுறுத்தினேன்.

அதன் காரணமாகவே,  முன்னெச்சரிக்கையாக என்.ஆர்.இளங்கோவனை திமுக வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்துள்ளது. நாளை மனு பரிசீலனை உள்ளது. என் மனு ஏற்றுக்கொள்ளப்பட் டால், என்.ஆர்.தனபாலனின் மனு வாபஸ் பெறப்படும் என தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.

எனவே இதுகுறித்து மதிமுக தொண்டர்கள் தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம்” என வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தேசத்துரோக வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பே, நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அவர்களை அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினேன்.  ‘நீங்கள் நிற்பதாக இருந்தால்தான் மாநிலங்கள் அவை உறுப்பினர் இடம் என்ற நிபந்தனையின் பேரில் நீங்கள் தந்தீர்கள். ஒருவேளை நான் தண்டிக்கப்பட்டு, அதனால் போட்டியிட முடியாத நிலைமை ஏற்படுமானால், அதற்கு உரிய மாற்று ஏற்பாட்டை நீங்கள் செய்துகொள்ளுங்கள்’ என்று, நான்தான் தளபதி ஸ்டாலின் அவர்களிடம் வலியுறுத்திக் கூறினேன்.

இப்பொழுது, என்னுடைய வேட்பு மனுவை ஏற்பது குறித்துத் தேர்தல் ஆணையத்திடம் கருத்துக் கேட்பதாக ஒரு செய்தி உலவுகின்றது. அது உண்மையா? பொய்யா? என்று எனக்குத் தெரியாது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், என்னுடைய வேட்புமனு உறுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும்கூட, முன்னெச்சரிக்கையாக என்.ஆர்.இளங்கோ அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்கின்றார்கள்.

நாளைய தினம் மனு பரிசீலனை நடைபெறுகின்றது. நான் மறுபரிசீலனைக்குப் போக முடியாது. காரணம், அதே நீதிமன்றத்தில் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் இவர்களுக்கான வழக்கு விசாரிக்கக்கூடிய மாண்புமிகு நீதிபதி சாந்தி அவர்கள் நீதிபதியாக இருக்கக்கூடிய நீதிமன்றத்தில், மற்றொரு வழக்கு விசாரணை நடைபெறுகின்றது.

எனவே, அன்று காலை 10.30 மணிக்கு அந்த நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும். எனவே, வேட்பு மனு பரிசீலனைக்கு என்னுடைய பிரதிநிதியாக வழக்கறிஞர் தேவதாஸ் அவர்கள் செல்வார்கள். அந்தப் பரிசீலனையில் என்னுடைய மனு ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகின்றேன். ஏற்றுக்கொள்ளப்பட்டால், அதற்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்.ஆர்.இளங்கோ அவர்கள் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றுக் கொள்வார் என்று தகவல் சொல்லப்படுகின்றது.

எனவே இதுகுறித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களோ, நான் நாடாளு மன்றம் செல்ல வேண்டும் என்று ஜாதி, மதம், கட்சி கடந்து என் மீது அன்பும், நல்லெண்ணமும் கொண்டவர்கள் மனதில் கவலையை ஏற்படுத்தி இருப்பதால், தேவையற்ற விவாதங்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் நான் அவசர அவசரமாக செய்தியாளர்களையும், தொலைக்காட்சி ஊடக நண்பர்களைச் சந்திக்க விரும்பினேன்.

தகவல் கொடுத்த 15 நிமிட காலத்துக்குள் நீங்களும் வந்துவிட்டீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.