வேலூர்

ரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி அடையும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறி உள்ளார்.

தமிழகத்தில் விடுபட்டுப் போன 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.  இந்த தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.  இன்று காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநில தலைவர் கே எஸ் அழகிரி திமுக – காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்துள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் அழகிரி, “தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிற்கு வாக்கு அளித்தது தவறு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஒரு சர்வாதிகார கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பதால் அண்ணாமலைக்கு அப்படி தோன்றுகிறது.

தனது தேர்தல் அறிக்கையில் திமுக கூறியதைப்போல, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, பால் விலை குறைப்பு, குடும்ப அட்டைகளுக்கு 4,000 ரூபாய் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவது பாராட்டத்தக்கது.  மாநிலத்தில் 10 ஆண்டுகளாக அதிமுக அரசும், கடந்த 7 ஆண்டுகளாக மத்தியில் பாஜக அரசும் நிறைவேற்றாத திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் நிறைவேற்ற முடியாது,  இன்னும் கால அவகாசம் தேவைப்படலாம்.

திமுக காங்கிரஸ் கூட்டணிக்குப் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.  எனவே தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் அதிக இடங்களில் வெற்று அடையும்.” எனத் தெரிவித்துள்ளார்.