துரை

துரை மாவட்டத்தில் இனி அரிவாள் மற்றும் கத்திகள் வாங்க ஆதார் எண் அவசியம் என காவல்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  அரிவாள் வெட்டு மற்றும் கத்திக்குத்து சம்பவங்கள் அடிக்கடி நிகழுகின்றன.   எனவே இதையொட்டி குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.   இந்த பகுதிகளின் முக்கிய இடங்களில் தணிக்கைச்சாவடி அமைக்கப்பட்டு வாகன தணிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குற்றங்களைக் குறைப்பது பற்றி காவல்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.  அந்த ஆலோசனைக் கூட்ட முடிவில் அரிவாள் மற்றும் கத்தி வாங்க ஆதார் எண் கட்டாயம் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.  மேலும் இவற்றை விற்கும் கடைகளையும் கண்காணிக்க வேண்டும் எனவும் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை நகரில் உள்ள நெல் பேட்டை, ஒத்தக்கடை, வில்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கத்தி மற்றும், அரிவாள் கடைகள் உள்ளன.  அங்குள்ள கடைக்காரர்கள் தங்களிடம் ஆயுதங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களில் ஆதார் எண்ணை அவசியம் வாங்கி வைத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  தவிர இந்த கடைகளில் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வாங்க வருவோரின் பெயர், முகவரி, கைப்பேசி எண், எந்த காரணத்திற்காக வாங்குகிறார் போன்றவற்றை பதிவேட்டில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், முன்விரோத கொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து மாநில அளவில் எடுக்கப்பட்ட “ஆப்பரேஷன் டிஸ்ஆர்ம் ” என்னும் தேடுதல் வேட்டையில் சுமார் 3,325 கொலைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, கொலைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படும் 1,110 கத்திகள் மற்றும் 7 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கத்தி, வீச்சரிவாள் போன்றவற்றை தயார் செய்யும் உரிமையாளர்கள் மற்றும் விற்பளையாளர்கள் அனைவரையும் காவல் நிலைய உட்கோட்ட அளவில் அழைத்து கூட்டங்கள் நடத்தப்பட்டது. இவ்வாறு மொத்தம் 579 கூட்டங்கள் நடத்தப்பட்டதில் 2,548 நபர்கள் கலந்துகொண்டு காவல் துறைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக கத்தி, வாள், வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பை கண்காணிக்கவும், இதுபோன்ற ஆயுதங்களை தவறானவர்கள் கைகளுக்கு செல்வதைக் கட்டுப்படுத்தவும் தமிழ்நாடு காவல் துறை தலைவர் சைலேந்திர பாபு, காவல் ஆணையாளர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் கீழ்காணும் நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

*அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பவர்கள், தயாரிக்கும் இடங்களை கண்டறிய வேண்டும்.

*அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வாங்க வருவோரின் பெயர், முகவரி, கைப்பேசி எண், எந்த காரணத்திற்காக வாங்குகிறார் போன்றவற்றை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

*விவசாயம் – வீட்டு உபயோகம் அல்லாமல் மற்ற காரணங்களுக்காக கத்தி போன்ற ஆயதங்களை அடையாளம் தெரியாதவர்களிடம் விற்பனை செய்யக்கூடாது.

*கண்காணிப்பு கேமராக்களை கடை மற்றும் பட்டறைகளில் பொருத்தப்பட வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதில் சிரமம் ஏற்பட்டால் காவல் துறை உதவி செய்ய வேண்டும்.

*குற்றவாளிகள் பற்றிய தகவல்களை காவல் துறைக்கு தெரிவிப்பவர்களுக்கு தக்க வெகுமதி வழங்க வேண்டும்.

இதன்படி ஒவ்வொரு காவல் நிலைய அதிகாரியும் மேற்கண்ட அறிவுரைகளை செயலாக்க வேண்டும் என காவல் துறை தலைவநர் அறிவுறுத்தியுள்ளார்.