சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மற்றும் திருச்சி மாநகராட்சியை திமுக கூட்டணி  கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. மற்ற மாநகராட்சிகளை யும் கைப்பற்றும் சூழல் எழுந்துள்ளது. கொங்கு மண்டலத்திலும் அதிமுகவை வீழ்த்தி திமுகவை முன்னிலையில் உள்ளது.

தமிழழ்நாட்டில்  கடந்த 19ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, அனைத்து இடங்களிலும் பெரும்பாலாக திமுக கூட்டணி கட்சிகளே முன்னிலை வகிக்கின்றன.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில்,திமுக கூட்டணி 21 மாநகராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், 60 வார்டுகளைக் கொண்ட தூத்துக்குடி மாநகராட்சியில் 50 இடங்களை திமுக கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.ஆனால்,60 வார்டுகளில் அதிமுக வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. மேலும், பிற கட்சிகள் நான்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 இடங்களில் திமுக கூட்டணி இதுவரை 33 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

நகராட்சி:

மாநிலம் முழுவதும் மொத்தம் 138 நகராட்சிகள் உள்ள நிலையில்,129 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறதுரு. அதிமுக 5 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளன.

பேரூராட்சி:

489 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி 367 இடங்களில் முன்னிலை, அதிமுக 25, பாஜக 3, பாமக 3,அமமுக 1, பிற கட்சிகள் 35 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையில் உள்ள 7  நகராட்சிகளையும்  முழுவதுமாக கைப்பற்றியது திமுக. பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம், காரமடை ,கருமத்தம்பட்டி, மதுக்கரை, கூடலூர் ஆகிய நகராட்சிகளை   திமுக கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.

40 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது . இதில் உள்ள 30 வார்டுகளில் திமுக கூட்டணி 16, அதிமுக 13, சுயேச்சை ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, திருமுருகன்பூண்டி நகராட்சியில் மொத்தம் உள்ள 27 இடங்களில் திமுக கூட்டணி 17 இடங்களிலும், அதிமுக 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமுருகன்பூண்டி, காங்கேயம், பல்லடம், தாராபுரம் , வெள்ளகோயில் , உடுமலைப்பேட்டை 6 நகராட்சிகளையும்  திமுக கைப்பற்றியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் திமுக 22 ,அதிமுக 9 மற்றும் காங்கிரஸ் இரண்டு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

பல்லடம் நகராட்சியில் மொத்தம் உள்ள  18 இடங்களில் திமுக 14 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும், அதிமுக, சுயேட்சைகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

வெள்ளக்கோவில் நகராட்சியில் மொத்தம் உள்ள 21 இடங்களில், 15-ல் திமுக கூட்டணியும்,  6 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. 

உடுமலைப்பேட்டை நகராட்சியில் மொத்தம் உள்ள 33 இடங்களில் 21-ல் திமுகவும், 4 இடங்களில் சுயேட்சைகளும்,  3 இடங்களில் அதிமுகவும் வென்றுள்ளது. 5 வார்டுகளில் இன்னும் முடிவு அறிவிக்கப்படவில்லை.

காங்கேயம் நகராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில்,  திமுக கூட்டணி 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 4 இடங்களிலும்,  சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தாராபுரம் நகராட்சியில்  மொத்தம் உள்ள 30 வார்டுகளில் திமுக கூட்டணி 23 இடங்களில் வென்று நகராட்சியை கைப்பற்றி உள்ளது. அதிமுக 3 இடங்களிலும்,  பாஜக மற்றும் சுயேட்டை தலா ஒரு இடத்திலும் வென்றுள்ளனர். 2 இடங்களுக்கு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.