சென்னை: திமுகவையும், திரைத்துறையையும் பிரிக்க முடியாது என சென்னையில்  சிஐஐ (CII – confederation of indian industry southern region) மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் இந்திய அளவில் தென்னிந்திய சினிமாவின் பங்களிப்பு , திரைப்படங்களில் தொழில்நுட்ப வளர்ச்சி , சமூக வலைதளங்கள் திரைப்படங்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் , குறைந்த பட்ஜெடில் பெருமளவில் வெளியாகும் தரமான படங்களுக்கான அங்கீகாரம் வழங்குவது எப்படி , ஒடிடி தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி , பொதுமக்களை திரையரங்குகளை நோக்கி ஈர்ப்பது எப்படி உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சில் 300 பல்வேறு திரைப் பிரபலங்கள் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

இன்றைய நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்ததுடன் “Regional is the new National” என்ற இந்திய தொழிற் கூட்டமைப்பின் தென் மண்டல அறிக்கையை வெளியிட்டார்,

இந்j நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, முதல்வராக பொறுப்பேற்று 11 மாதங்கள் ஆன நிலையில், தொழில்துறையில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற அடிப்படையில் துபாய், அபுதாபி சென்றுவிட்டு வந்தேன். மாநில உரிமைகளை உரிமையுடன் கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் டெல்லி சென்று வந்தேன்.

பின் முதன்முறையாக கலைத்துறையினர் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றேன் என்பது பெருமை. முதல்வராக வந்திருந்தாலும் ஒரு காலத்தில் திரைப்பட தயாரிப்பாளராக இருந்தவன். எனது ஒரு சில படங்களில் சில வேடங்களிலும் நடித்துள்ளேன். நாடக மேடைகளிலும் பங்கேற்றுள்ளேன். திரைத்துறையுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதால் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளேன். முற்போக்கான திரைப்படங்கள் எடுக்க வேண்டும். புகைபிடிக்க கூடாது, மது அருந்த கூடாது என திரை படத்திற்கு முன்பு ஒளிபரப்புவது பாராட்டிற்குரியது. அதே போல் குட்கா கஞ்சா குறித்தும் விழிப்புணர்வு வாசகம் இடம் பெற வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், நானும் சினிமா துறையை சேர்ந்தவன் நான், நாடக மேடையிலும் நடித்தவன். முதல்வராக என்னை பார்க்க வேண்டாம். உங்களில் ஒருவனாக பாருங்கள். அப்பா முதல் எனது மகன் வரை சினிமா துறையில் தொடர்பு உண்டு. சினிமாவையும், திமுகவையும் பிரிக்க முடியாது போல் என்னையும், என் குடும்பத்தையும் சினிமாவில் இருந்து பிரிக்க முடியாது என்றார்.அதனால், ஆர்வத்துடன் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டில் கலந்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.

நாளை நடைபெறக்கூடிய நிகழ்வில் முன்னணி இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் , மணிரத்னம் , ஏ ஆர் முருகதாஸ் ஆகியோரும் , இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர்.