செக் மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

திரைப்பட இயக்குனர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள திருப்பதி பிரதர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், கடந்த 2014-ம் ஆண்டு பி.வி.பி. கேப்பிடல் நிறுவனத்திடம் இருந்து ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் வாங்கியது.

அதற்கு வட்டியுடன் சேர்த்து காசோலையாக ரூ.1 கோடியே 35 லட்சத்தை தந்தனர். இந்த காசோலை வங்கியில் பணமில்லாமல் திரும்பியதை அடுத்து இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அவர்கள் இருவருக்கும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி இயக்குனர் லிங்குசாமி மீதான தண்டனையை உறுதிசெய்தார்.

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த லிங்குசாமி இந்த வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 20 சதவீத தொகையை ஏற்கனவே டெபாசிட் செய்துள்ளதாக கூறினார்.

மேலும், 20 சதவீத தொகையை டெபாசிட் செய்துவிடுவதாகவும் உறுதியளித்த லிங்குசாமி தரப்பு தங்கள் மீதான தண்டனையை நிறுத்திவைக்க கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இன்னும் 6 வார காலத்திற்குள் 20 சதவீதப் பணத்தை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யவும் சிறை தண்டனையை நிறுத்திவைக்கவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது.