அருள்மிகு வேளச்சேரி தண்டீஸ்வரர் திருக்கோயில்

தலவரலாறு:

16 வயதே ஆயுள் பெற்றிருந்த சிவ பக்தன் மார்க்கண்டேயனின் ஆயுளை எடுக்கச் சென்ற காலனை சிவபெருமான் காலால் எட்டி உதைத்துத் தண்டித்தார். காலனின் பதவியையும் பறித்தார். இழந்த பதவியைப் பெற எமன், பூலோகத்தில் சிவதல யாத்திரை மேற்கொண்டான். இத்தலத்தில் தீர்த்தம் உருவாக்கி, சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்தான். அப்போது எமனுக்குக் காட்சி தந்த சிவன், தண்டம் கொடுத்துப் பணி செய்யும்படி அறிவுறுத்தி அருளினார். எனவே இத்தலத்துச் சிவன், “தண்டீஸ்வரர்’ என்று பெயர் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.

சோமாசுரன் என்னும் அசுரன், நான்கு வேதங்களையும் பிரம்மாவிடமிருந்து பறித்துச்சென்றான். அதனைத் திருமால் மீட்டு வந்தார். அசுரனிடம் தாங்கள் இருந்த தோஷம் நீங்க, வேதங்கள் சிவனை வேண்டி தவமிருந்தன. வேதங்களின் சிவ வழிபாட்டிற்கிரங்கி காட்சி தந்த சிவபெருமான் வேதங்களுக்கு ஏற்பட்ட தோஷம் நீக்கி அருளினார். வேதங்கள் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டதால் “வேதச்சேரி’ என்றழைக்கப்பட்டு, பின்பு “வேளச்சேரி’ என்று மருவியது. வேதஸ்ரேணி என்பது இத்தலத்தின் புராணப்பெயராகும்.

சென்னையின் வேளச்சேரி வட்டத்தில் வேளச்சேரியின் மையப்பகுதியில் அமைந்துள்ள தண்டீஸ்வரர் கோயில் முற்காலச் சோழர் கைப்பாணியை இன்றும் தன்னகத்தேக் கொண்டுள்ளது. வேள் சேரி என்றிருந்ததே வேளச்சேரி ஆகியிருக்க வேண்டும். இப்பகுதி குறுநில மன்னனாகிய வேள் ஒருவனால் ஆட்சி செய்யப்பட்டிருக்க வேண்டும். இப்பகுதியில் சோழர்கள் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்த இக்கோயிலைக் கட்டி அதற்கு நிவந்தங்களையும் அளித்துள்ளனர்.

முதலாம் இராஜராஜசோழனின் தந்தையாகிய சுந்தரசோழனால் இக்கோயில் கட்டப்பட்டதாக இங்குள்ள கல்வெட்டொன்று குறிப்பிடுகின்றது. இக்கோயிலில் உள்ள சப்தமாதர்களின் தொகுதியில் உள்ள சாமுண்டி தேவியே தற்பொழுது செல்லியம்மன் கோயில் என்று தனிக்கோயிலாக விளங்குகிறது. இக்கோயிலின் தலவரலாற்றின் படி எமதர்மன் மீண்டும் தண்டம் பெற்ற திருத்தலம் என்பதால், இங்கு மக்கள் அறுபது, எண்பதாம் திருமணம் மற்றும் ஆயுள் விருத்தி ஹோமங்கள் செய்து கொள்கிறார்கள்.

வேளச்சேரியில் சிவத்தலம் மற்றும் வைணவத் தலங்களைச் சோழர்கள் கட்டியுள்ளனர். யோக நரசிம்ம பெருமாள் கோயில் வேளச்சேரியில் தற்போது வழிபாட்டில் உள்ளது. இக்கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட வைணவத் தலமாயிருக்க வேண்டும். பல முனிவர்கள் ஒன்றிணைந்து இத்தலத்தில் தொடர்ந்து யாகம் செய்ததன் பலனாக அவர்களுக்குத் திருமால் யோக நரசிம்மராகக் காட்சி தந்ததாகவும், அதனால் வேள்விகள் நடந்த இத்தலம் வேள்விச்சேரி என்றும் பின்னர் வேளச்சேரி என அழைக்கப்பட்டதாகவும் கருதப்படுகின்றது.