டெல்லி: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள்  மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ராஜினாமா செய்துள்ளதாக மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஹவாலா பணப்பரிமாற்றம் வழக்கில் கடந்த ஆண்டு (2022) டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஹவாலா பரிமாற்றம் தொடர்பான  வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர்  சிறையில் அடைக்கப்பட்டிருந்தும், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாமல் சிறையில் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்தார். கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக அவர் தனது  அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யாமல், அரசு சம்பளத்தையும் சலுகையையும் அனுபவித்து வந்தார்.

இந்த நிலையில், மதுபான ஊழல் தொடர்பாக டெல்லி கல்வி அமைச்சர்  மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது ஜாமின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

இந்த நிலையில், அமைச்சர்கள் சத்யேந்திர ஜெயின், மணிஷ் சிசோடியா ராஜினாமா செய்துள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். அவர்களது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.