சென்னை: வங்கக்கடலில் உருவாகி வரும்  காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலைமை மையம் எச்சரித்துள்ளதன் எதிரொலியாக சென்னையில் உள்ள  பூங்காக்களை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்,  வங்கக் கடலில் நிலவி வரும் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி  புயலாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது  என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த தாழ்வுப்பகுதி  மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (வியாழக் கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக் கூடும் என்றும்,  இதன் காரணமாகவும், இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் அடுத்து வரும் 4 நாட்களுக்கு (இன்று முதல் 3-ம் தேதி வரை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று மழை மேலும், இன்று (டிசம்பர் 1) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நீடிக்கும் என்பதால், நாளை  (02-12-2023), அதற்கு அடுத்த நாள் (03-12-2023) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வங்கக் கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 3ம் தேதி புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னையில் கனமழை  பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னையிலுள்ள அனைத்து பூங்காக்களையும் மூட மாநகராட்சி திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொது மக்களின் நலன் கருதி கனமழை எச்சரிக்கையை திரும்ப பெறும் வரையில் சென்னையில் உள்ள பூங்காக்களை மூட உத்தரவிடப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது.