தேனி

வைனைஅணையில் நீர் திறக்கப்படுவதால் 4 மாவடங்களில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வைகை அணை தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்தது. எனவே மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஒருபோக பாசனத்திற்காக அணையில் இருந்து பாசன கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இன்று சிவகங்கை மாவட்ட 2ஆம் பூர்வீக பாசனத்திற்காக வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வைகை அணையில் உள்ள பிரதான 7 முழு சிறிய மதகுகள் வழியாகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகை ஆற்றில் வருகிற 5 ஆம் தேதி வரை 5 நாட்களுக்குத் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதில் முதல் 2 நாட்களுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியும், 3-ம் நாள் வினாடிக்கு 1,500 கன அடியும், 4-வது நாளில் வினாடிக்கு 1,000 கன அடியும், 5-வது நாளில் வினாடிக்கு 665 கன அடியும் திறக்கப்பட உள்ளது. மொத்தம் இந்த 5 நாட்களில் வைகை அணையில் இருந்து 619 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.