சென்னை: 
10,11, 12ம் வகுப்புத் தேர்வு  எழுதும் மாணவர்களுக்குப் பாடத்திட்டம்  விரைவில் குறைக்கப்படும்  என்று  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தெரிவித்துள்ளார்.
அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் எழுதுக இயக்கம் சார்பில் நான்காம் வகுப்பு மாணவி முதல் கல்லூரி மாணவர்கள் வரை எழுதிய 100 புத்தகங்கள் வெளியிட்டு விழாவில்   அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , 10,11, 12ம் வகுப்புத் தேர்வு  எழுதும் மாணவர்களுக்குப் பாடத்திட்டம் குறைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,விரைவில் குறைக்கப்படும் என்று தெரிவித்தார்.
பள்ளிகள்  திறப்பு குறித்துப் பேசிய அவர், மூன்று மாநிலங்களில் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாகவும், வரும் நாட்களில் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்பே பள்ளிகள் திறப்பது குறித்து, பெற்றோரிடம் கருத்துக் கேட்கப்படும் என அவர் கூறினார்.
12ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத 23 மாணவர்கள் மட்டுமே மறு தேர்விற்காக விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.