மும்பை
மும்பையில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 169ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்துள்ளது.
நேற்று மும்பையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின. நாடெங்கும் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்த போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. முதலாம் நாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது.
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இந்தப் போட்டியில் சென்னை கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் தொடக்க ஆட்டக்காரரான இவில் லீவிஸ் எல்பிடபுள்யூ ஆனதற்கு அப்பீல் தெரிவித்தார். ஆனால் அவர் அப்பீல் ஏற்கப் படவில்லை அதன் பிறகு ரோகித் சர்மா அவுட் ஆனார். இரு தொடக்க வீரர்களும் அவுட் ஆனதை தொடர்ந்து 20 ஓவர்களில் மும்பை அணி 165 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்ததாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு மும்பை பந்து வீச்சாளர்கள் பெரும் சவாலாகவே இருந்தனர். முதல் 12 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 75 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன் பிறகு களம் இறங்கிய ட்வெய்ன் பிராவோ ரன்களை குவிக்கத் தொடங்கினார். ஆயினும் விக்கட்டுகளும் சரிந்துக் கொண்டே வந்தன.
சென்னை அணி வெற்றி பெற கடைசி ஓவரின் ஆரம்பத்தில் 7 ரன்கள் தேவைப்பட்டன. மும்பையின் முஸ்தாபிஜூன் ரகுமானின் பந்து வீச்சை எதிர் கொண்ட கேதர் ஜாதவ் முதல் மூன்று பந்துகளில் ரன் எடுக்காத நிலையில் 4 ஆம் பந்தில் ஒரு பவுண்டரி அடித்து சென்னை கிங்ஸ் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டினார். அடுத்த பந்தில் மற்றொரு பவுண்டரி அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக விளையாட தடை விதிக்கப்பட்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்திலேயே வெற்றி பெற்றது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் 30 பந்துகளில் 68 ரன்களைக் குவித்த டுவெய்ன் பிராவோ ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றி உள்ளார்.