சென்னை:  டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனத்தை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. இதன் காரணமாக டிஎன்பிஎஸ்சியின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை  கேள்விக்குறியாக உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பணிக்கு நேர்மையாகவும், முறையாகவும் பணியாட்கள் தேர்வு செய்வதற்காகவே  டிஎன்பிஎஸ்சி  எனப்படும் தமிழ்நாடு மாநில தேர்வாணையம் அமைக்கப்பட்டு,  தேர்வுகள் நடத்தப்பட்டு காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், சமீபகாலமாக, இந்த தேர்வு முறையிலும் முறைகேடுகள் நடைபெறு வதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. அதை உறுதி செய்யும் வகையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது,  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட  18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. இதன் காரணமாக டிஎன்பிஎஸ்சியின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த நிர்மல் குமார் உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2020ம் ஆண்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் நான்கு பணியிடங்கள் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. மற்ற 14 பணியிடங்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு நடைபெற்று ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் அதில் முறையான இன சுழற்சி முறையைப் பின்பற்றி இடஒதுக்கீடு வழங்காமல் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன.
குறிப்பாக அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தேர்வாளர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. எனவே உரிய இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட தேர்வாணையத்துக்கு உத்தரவிட வேண்டும், என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2020-ம் ஆண்டு,பிறப்பித்த இடைக்கால உத்தரவில், பணி நியமனங்கள் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று தெரிவித்திருந்தது. இதையடத்து,  இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு  நேற்று ( மே 3ந்தேதி – வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.சங்கரன், “மாவட்ட கல்வி அலுவலர் நியமனத்தில் முறையான இன சுழற்சி முறை பின்பற்றப்படவில்லை. அதிக மதிப்பெண் பெற்ற தகுதியுடைய பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தேர்வாளர்களுக்கு பொதுப்பிரிவில் இடம் வழங்கப்பட வில்லை. எனவே பட்டியலை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, “கடந்த 2020-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டார். முறையான இடஒதுக்கீடு முறையை பின்பற்றி 4 வாரத்துக்குள் மாற்றியமைக்கப்பட்ட புதிய பட்டியலை வெளியிட வேண்டும்” என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டார்.

டிஎன்பிஎஸ்சி அவ்வப்போது குற்றச்சாட்டுக்கள் எழுவது வாடிக்கையாக உள்ளது. ஆளும் அரசுக்கு ஏற்ப டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் நடந்துகொள்வாக கூறப்படுகிறது. மேலும், ஆட்சி யாளர்களுக்கு சாதகமாக பணி நியமனங்கள் போடப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.  ஏற்கனவே  கடந்த 2020ம் ஆண்டு  நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்தது. குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்ததாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 99 தேர்வர்களுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் மட்டுமல்லாமல், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட சிலரை சிபிசிஐடி போலீஸார் கைதுசெய்துள்ளனர். தொடர்ந்து குறிப்பிட்ட  கல்வி நிறுவனங்களின் மூலம் படிக்கும் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இதைத்தொடர்ந்து, 2021ம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக  இருந்த  ஆர்.செல்லமுத்து,  தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து அவ்வப்போது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வந்த நிலையில், கடந்த ஆண்டும், தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் செய்யப்பட்டு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சிக்கு எதிராக சமுக வலைதளங்களில் ஹேஸ்டேக்கை டிரெண்டிங் செய்த நிலையில், தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

இந்த நிலையில், தற்போது டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்ட கல்வி அலுவலர்கள் நியமனத்தை நீதிமன்றம் ரத்து செய்துள்ள விவகாரம், டிஎன்பிஎஸ்சி மீதான நம்பக்கத்தன்மையை மேலும் சீர்குலைத்துள்ளது.

டிரெண்டிங் எதிரொலி: குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…