சென்னை:

மிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது, மேலும் எல்இடி மின் விளக்குகள் வாங்கியதில் அரசுக்க பலகோடி நஷ்டம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து கவர்னர் உடடினயாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து  திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிற அ.தி.மு.க.வின் பதவி காலம் நித்திய கண்டம் பூரண ஆயுசாக மாறி வருகிறது. இந்நிலையில் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் தங்களது ஊழல் நடவடிக்கைகளை அனைத்து துறைகளிலும் நீக்கமற செய்து வருகிறார்கள். இதனால் ஊழல் தலைவிரித்தாடி வருகிறது.

உட்கட்சி பூசல்களுக்கு ஊடகங்களில் அதிகளவில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதால் பல்வேறு துறைகளில் நடைபெறுகிற ஊழல் வெளிச்சத்திற்கு வராமல் மூடி மறைக்கப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக எல்.இ.டி. பல்புகள் கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.

அதன்படி எல்.இ.டி. பல்பு சந்தை மதிப்பில் குறைந்தபட்ச விலையாக ரூபாய் 1450 முதல் ரூ.2125 வரை கிடைக்கிறது.

ஆனால் அரசின் கொள்முதல் விலை ரூபாய் 3735 முதல் ரூபாய் 4125 என மாவட்டத்திற்கு மாவட்டம் விலை நிர்ணயம் செய்து ஒப்பந்தக்காரர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கான ஆதாரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. சராசரி சந்தை மதிப்பை விட கூடுதலாக ரூபாய் 2000 கொடுத்து

அரசாணைப்படி 24 லட்சம் பல்புகள் வாங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 862 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.

சராசரி கொள்முதல் விலை ரூபாய் 1990 வீதம் கொள்முதல் செய்திருந்தால் ரூபாய் 459 கோடி மட்டுமே செலவாகும். ஆனால் அரசு நிர்ணயித்துள்ள விலைப்படி கூடுதலாக ரூபாய் 403 கோடி செலவாகிற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதில் பெரும் தொகை சம்மந்தப்பட்டவர்களுக்கு கைமாறியிருப்பதாக கூறப்படுகிறது.

கிராமப்புறங்களில் கழிப்பறைகளுக்கான கதவுகள், மேற்கூரைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ள திலும் ஊழல்கள் நடந்துள்ளன.

அதே போல, ஐந்தாண்டு திட்டம் தயாரிப்பு பயிற்சிக்கான பைகள் மற்றும் உபகரணங்கள் ஒருசில குறிப்பிட்ட நபர்களிடமே மத்திய தொகுப்பாக கொள்முதல் செய்ததில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது.

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை என்பது ஊழல் வளர்ச்சித்துறையாக நாளுக்கு நாள் மாறி வருவதைக் கண்டு அரசு ஊழியர்கள் கடும் கொந்தளிப்பான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

எனவே, இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் அல்லது கவர்னர் இப்பிரச்சனையில் தலையிட்டு உயர்மட்ட விசாரணைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.