சென்னை

ன்று சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.25 உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மற்றும்  டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையிலும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி வருகின்றன.   சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இதே அடிப்படையில் மாதத்துக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட்டு வந்தது.

முதலில் மாத முதலில் மட்டும் மாற்றி அமைக்கப்பட்ட எரிவாயு விலை இப்போது இடையிலும் மாற்றப்படுகிறது.   இதுவரை இந்த மாற்றத்தின் போது எரிவாயு விலை அதிகரிப்பே அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.   கடந்த ஜூலை மாதம் சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.25 மற்றும் ஆகஸ்ட் மாதம் ரூ.25 என உயர்ந்தது.

இந்நிலையில் இந்த மாதத்துக்கான விலை உயர்வாக ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே ஒரு சிலிண்டர் விலை ரூ.875.50 ஆக இருந்த நிலையில் இன்று முதல் அது ரூ.900.50 ஆகி உள்ளது.   இதனால் மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   இதைப் போல் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு விலை ரூ.75 உயர்ந்து ரூ.1831 ஆகி உள்ளது.

சமையல் எரிவாயு விலை கடந்த ஓராண்டில் ரூ.285 உயர்ந்துள்ளது.