சென்னை

விரைவில் டைடல் பார்க் நிறுவனம் தமிழகத்தில் உள்ள நகரங்களில் சிறிய டைடல் பூங்காக்களை அமைக்க உள்ளது.

தமிழகத்தில் உள்ள டைடல் பார்க் நிறுவனம் சென்னையில் மிகப் பெரிய டைடல் பூங்கா ஒன்றை அமைத்துள்ளது.  இங்கு மின்னணு, தகவல் தொழில்நுட்பம் போன்ற நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இதன் மூலம் ஏராளமானோருக்குப் பணி வாய்ப்பு கிடைத்துள்ளது.  இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் பேரரசு ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில், “தமிழக தொழில்துறை மேம்பாட்டு நிறுவனமான டிட்கோவின் கூட்டாண்மை நிறுவனமான டைடல் பார்க் நிறுவனம், தமிழ்நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் சுமார் 50,000 முதல் 1,00,000 சதுர அடி பரப்பளவில் மினி டைடல் பூங்காக்களை அமைக்கவுள்ளது.  இவ்வாறு மினி டைடல் பூங்காக்களை அமைப்பதற்குத் தேவையான நிலங்களை அரசு வழங்க உள்ளது.

இந்த டைடல் நிறுவனத்தால் அமைக்கப்படும் சிறப்பு நோக்கு நிறுவனத்தில் அரசின் பிரதிநிதியாக டிட்கோ நிறுவனம் ஒரு பங்குதாரராக செயல்படும்.  இதில் முதற்கட்டமாக விழுப்புரம், தூத்துக்குடி, வேலூர் மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களில் மினி டைடல் பூங்காக்களை டைடல் பார்க் நிறுவனம் அமைக்கும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.