சென்னை: நீதிமன்ற உத்தரவிட்டும், அதை  நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்ககை சென்னை உயர்நீதி மன்றம் எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், தங்களது பகுதி  மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தண்டு மாரியம்மன் கோவில், அம்மனி பழனியப்பா முதலி தெரு, காட்டு வேலாயுத முதலி தெரு ஆகியவற்றின் சந்திப்பில் 350 மீட்டர் நீளத்திற்கு குடிநீர் குழாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்த சேலம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டுமென்ற  சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்த கடிதத்தை அப்போதைய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து பொது நல வழக்காக விசாரணைக்கு எடுத்தது. விசாரணையின்போது, தமிழகஅரசு அளித்த விளக்கத்தில், சேலம் ஆட்சியர், மேட்டூர் சார் ஆட்சியர், செயற் பொறியாளர், நகர பஞ்சாயத்து உதவி இயக்குனர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததாகவும், தாரமங்கலத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட உள்ளதாகவும், குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும் என  உறுதியளிக்கப்பட்டது. இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

ஆனால், அரசு சார்பில் அளிக்கப்பட்ட உறுதி மொழி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும், இதுவரை குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படவில்லை என உயர் நீதிமன்றத்திற்கு சக்திவேல் மீண்டும் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த  கடிதத்தை அடிப்படையாக கொண்டு  கடந்த ஆண்டு எடுத்த சூமோட்டோ வழக்கில் எதிர் மனுதாரர்களாக உள்ள அரசு அதிகாரிகளுக்கு எதிராக தற்போதைய தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது.

அதைத்தொடர்ந்து, சென்னை  நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தாத அரசு அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.